அருந்ததியர் தெலுங்கு வந்தேறிகள்.. நான் வரலாறு தான் பேசினேன்.. அடம்பிடிக்கும் சீமான்
அருந்ததியர் தொடர்பான தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என்கிறார் சீமான்.
சென்னை: அருந்ததியர் தெலுங்கு வந்தேறிகள் என்ற கருத்தை வரலாற்றில் இருந்து தாம் சொல்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பிரசாரம் செய்த சீமான், பெரும்பான்மையினராக உள்ள முதலியார் ஜாதி வாக்குகளை குறிவைத்து பேசினார். அப்போது முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.. அந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்கள் முதலியார் ஜாதியினர். அத்துடன் போர் என்றால் முதலில் செவ்வேள் ஏந்தி களத்துக்கு வந்தவர்கள். அதனால்தான் அவர்கள் முதலியார் என அழைக்கப்பட்டனர். இந்த வரலாறு தெரியுமா? அத்துடன் இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதைப்போல விஜயநகரப் பேரரசு ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார். அருந்ததியர்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்து குடியேற்றப்பட்ட வந்தேறிகள் என்பது சீமான் கருத்து.

சீமானின் இந்த கருத்துக்கு அருந்ததி ஜாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, கோவை என பல இடங்களில் சீமான் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.

இந்நிலையில் நியூஸ்18 தமிழ்நாடு ஊடகத்துக்கு சீமான் பேட்டி அளித்துள்ளார். அதில், அருந்ததியர் வந்தேறிகள் என பேசியது குறித்த கேள்விக்கு, நான் வரலாற்றைத்தானே பேசினேன். திமுகவினர் தூண்டுதலில் சிலர் அப்படி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என மீண்டும் கூறினார் சீமான்.
ஏற்கனவே அருந்ததியர் தமிழ்நிலத்தில் குடியேறியது எப்போது? தமிழ்நிலத்தில் போராடியது எப்படி? என்பது உள்ளிட்ட விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன. தற்போது சீமான் தாம் சொன்னது சரி என பேசியிருப்பது இந்த பிரச்சனை தற்போது ஓயாது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications