சீமான் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்.. நடிகை பலாத்கார விவகாரத்தை விசாரிக்க தடை கோரி மனு!
சென்னை: நடிகை பலாத்கார விவகாரத்தில் அடுத்த 12 வாரங்களில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே சென்னை ஐகோர்ட் உத்தரவுக்குத் தடை விதிக்க கோரி சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமா நடிகை பரபர புகார் ஒன்றை அளித்திருந்தார்.

சீமான் வழக்கு
தம்மைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீமான் ஏமாற்றியதாகவும் பல முறை கருக் கலைப்பிற்கு உள்ளாக்கியதாகவும் சீமான் மீது தமிழ் சினிமா நடிகை புகார் அளித்திருந்தார்.. அதன் அடிப்படையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும், இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவை டிஸ்மிஸ் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், "இந்த புகார் தீவிரமானது. அவர் புகாரை வாபஸ் பெற்றாலும் விசாரணையைத் தொடர்ந்து நடத்த போலீசாருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்த 12 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தார்.
சம்மன்
அதைத் தொடர்ந்து சீமான் மீதான வழக்கை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 15 பேர் விசாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சம்பந்தப்பட்ட நடிகை 3 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இதற்கிடையே நாளைய தினம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
முறையீட்டு மனு
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகச் சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமான் தரப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களும், அனைத்து அம்சங்களும் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையை போலீசார் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று சீமான் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications