ஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு சீமான் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல்
சென்னை :திமுக துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு சீமான், தயாநிதி மாறன், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மக்களவை உறுப்பினரும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான அருமை அண்ணன் ஆ.ராசா அவர்களின் இணையர், அண்ணியார் பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
கொள்கைப்பிடிப்பும், அறிவுத்திறனும், நாவன்மையும் ஒருசேர அமையப்பெற்று தமிழகத்தின் தவிர்க்க இயலா முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகத் திகழ்கிற அண்ணன் ஆ.ராசா அவர்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடவும், தொடர்ந்து இயங்கவும் பெருந்துணையாய் நின்ற அவரது இணையரின் மறைவு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
உயிர்த்துணையின் இழப்பு தந்த வலியில் சிக்குண்டு, பெருந்துயரத்தில் வாடும் அண்ணன் ஆ.ராசாவுக்கு ஆறுதலாகத் துணைநிற்கிறேன். அண்ணியார் பரமேஸ்வரி அவர்களது இழப்பால் வாடும் அண்ணனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.
இதேபோல் திமுக எம்பி தயாநிதி மாறன் வெளியிட்டிருந்த பதிவில், திமுக துணைபொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருமை சகோதரர் திரு.ஆ.ராசா M.P, அவர்களின் துணைவியார் திருமதி.பரமேஸ்வரி அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன், அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சுப்ரியா சுலே ஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா அவர்களின் அன்புத்துணைவியார் பரமேஸ்வரி அவர்களின் மறைவு அறிந்து மிகவும் துயருற்றேன். ராசா அவர்களுக்கும்,குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். என்று கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழக துணை பொதுச் செயலாளர் அண்ணன் ராசா
அவர்களின் மனைவி பரமேஸ்வரி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. ராசா அண்ணனின் பொதுவாழ்வில் தோளோடு தோள் நின்ற அவர்களது மனைவியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அண்ணனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்.ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.