அதிமுகவை ஏன் விமர்சிக்கல? கட்சி தலைவியே ஊழல் வழக்கில் சிறைக்கு போனாரே.. விஜய்க்கு சீமான் கேள்வி!
சென்னை: "ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக பற்றியும் விஜய் விமர்சிக்காதது ஏன்? அதிமுக என்ன புனிதமான கட்சியா? அக்கட்சியின் தலைவி ஊழல் வழக்கில் சிறை சென்று வந்தவர் தானே. அந்த கட்சியை பற்றியும் விஜய் ஏன் விமர்சிக்கவில்லை?" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், தமது கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்களை எடுத்துரைத்தார். அப்போது திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இரு கண்களாக பார்ப்பதாக தெரிவித்திருந்தார் விஜய்.

இதைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யை சரமாரியாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு. இரண்டும் ஒன்று எனக் கூறும் அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல. கூமுட்டை. ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்தப் பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துவிட வேண்டியதுதான்." என காட்டமாகப் பேசினார் சீமான்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜய் பற்றி கடுமையாக விமர்சித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் பதில் அளித்துப் பேசுகையில், "விஜய் கட்சியின் கொள்கை, முரண்பாடுகள் கொண்டதாக உள்ளது. திராவிடம் என்ற விஷமும் தமிழ் தேசியம் என்ற மருந்தும் எப்படி ஒன்றாகும்?
திராவிடம் என்பது மக்களை பிளவுப்படுத்தி பார்ப்பதாகும். தமிழ் தேசியம் என்பது அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வது. விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் ஒன்றா? சாதி, மதம், இனம், மொழி என்று பிரிக்கிறார்கள் என்று விஜய் பேசுகிறார். சாதி மதத்தோடு இனத்தையும் மொழியையும் ஒப்பிடுவது சரியா? ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம் மொழி. மதமும் சாதியும் நமது அடையாளம் அல்ல மொழிதான் நமது அடையாளம்.
இலங்கையில் தமிழ் மக்கள் தனக்கென ஒரு நாடு வேண்டும் என கேட்டது பிரிவினை வாதமா? விடுதலையா? சாதியையும், மதத்தையும் மொழி, இனத்துடன் ஒப்பிடுவதே அறிவற்றத்தனம். திராவிடத்தை வளர்க்க கட்சி என்றால் இங்குதான் திராவிடமே வலிமையாக இருக்க கட்சிகள் இருக்கிறதே. அடுத்த தலைமுறைக்கும், அதற்கடுத்த தலைமுறைக்கும் திராவிடத்திற்கு தலைவர்கள் தயாராக உள்ளனரே. அப்புறம் எதற்கு புதிதாக கட்சி?
பாஜக மதவாதம் என்றால் காங்கிரஸ் மிதவாதமா? நீட் தேர்வு, அணு உலை என பல நாசகார திட்டங்களை கொண்டுவந்தது காங்கிரஸ் தான். பாபர் மசூதியை இடித்தபோது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. பாஜக சத்தமாக இந்துத்துவா பேசும், காங்கிரஸ் சத்தமின்றி இந்துத்துவா பேசும். இரன்டும் ஒன்றுதான்.
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் செய்த காங்கிரஸ் பற்றியும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக பற்றியும் விஜய் விமர்சித்து எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அதிமுக தலைவி ஊழல் செய்யவில்லையா? அதிமுக என்ன புனிதமான கட்சியா? அக்கட்சியின் தலைவர் ஊழல் வழக்கில் சிறை சென்று வந்தவர் தானே? காங்கிரஸ், அதிமுக உங்கள் எதிரி இல்லையா? ஒன்று கொள்கையை மாற்ற வேண்டும் இல்லை என்றால் எழுதி கொடுப்பவரை மாற்ற வேண்டும். இரண்டையும் வைத்துக் கொண்டு குழப்பிக் கொள்ளக்கூடாது.
அண்ணன் தம்பி உறவு வேறு, அரசியல் கொள்கை வேறு. அரசியலில் எதிரி என வந்துவிட்டால் எதிரி தான். பெற்ற தாய் தந்தை என்றாலும், கடவுளே என்றாலும் கொள்கையில் வேறுபட்டால் எதிரிதான். ரத்த உறவை லட்சிய உறவுதான் மேலானது. குடும்ப உறவை விட கொள்கை உறவுதான் மேலானது." எனத் தெரிவித்துள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications