சீமானுக்கு நீடிக்கும் சிக்கல்! விஜயலட்சுமி வாபஸ் பெற்றாலும்.. 18ம் தேதி ஆஜராக வேண்டும்: போலீஸ் தகவல்
சென்னை: சீமானுக்கு எதிராக அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றாலும் வரும் 18 ஆம் தேதி சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. "வாழ்த்துகள்" பட காலத்தில் சீமான் - விஜயலட்சுமி காதல் உருவானது என்கிற பேச்சு உண்டு. 2008-ம் ஆண்டு மதுரையில் சீமான் தம்மை திருமணம் செய்து கொண்டார்; பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் மதுரை ஹோட்டலில் சாந்தி முகூர்த்தம் நடந்தது. 3 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் சீமான் ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார்.

இது தொடர்பாக 2011-ம் ஆண்டு சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் புகார் கொடுத்திருந்தார். அப்போது சீமான் - விஜயலட்சுமி இருதரப்பும் சமாதானமான நிலையில் புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். இதன் பின்னர் சீமான் மீது பல்வேறு புகார்களை வீடியோ பதிவுகள் மூலம் கூறி வந்தார் விஜயலட்சுமி. சென்னையில் தங்கியிருந்த போது தற்கொலைக்கும் விஜயலட்சுமி முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் சென்ற விஜயலட்சுமி, சீமானை பழிவாங்குவதாக வீடியோ பதிவிட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சீமான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் எனவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் முதல் சம்மன் அனுப்பி இருந்தனர். அப்போது, கட்சிப் பணிகள் அதிகமாக இருப்பதால் தமக்கு ஆஜராக நேரம் இல்லை என கூறியிருந்தார். பின்னர் சீமான் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அவர் கொடுத்த கடிதங்களை வழங்கினர்.

அதில், தம் மீதான புகார்கள் குறித்து விளக்கம் கொடுத்தால் ஆஜராக தயாராக இருக்கிறேன் என சீமான் தெரிவித்திருந்தார். சீமான் 18 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்து இருந்த நிலையில், நேற்று இரவு திடீர் திருப்பமாக, சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "போலீசாரின் உரியப் பாதுகாப்புடன் தான் இருந்தேன்.
வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தான் தங்கி இருந்தேன். இருப்பினும், கடந்த சில நாட்களாக வீரலட்சுமி ஒரு ரூட்டில் செல்கிறார். என்னையும் வேறு ஒரு ரூட்டில் தள்ளப் பார்க்கிறார். எதுவாக இருந்தாலும் என்னைக் கேட்டுவிட்டுப் பேசும்படி கூறியிருந்தேன். நான் தங்கி இருந்த இடத்தில் இருந்து நேற்றிரவே என்னை அங்கிருந்து வெளியே செல்லும்படி சொன்னார்கள்.
நாங்கள் இந்த விவகாரத்தில் முழு முயற்சி எடுத்தோம். இருப்பினும், உரிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணை நடந்த விதத்தில் இதில் திருப்தி இல்லை. தமிழ்நாட்டில் சீமானுக்கு அதிக பவர் இருக்கிறது போல.. அவரை தாண்டி எதுவும் செய்ய முடியாது போல.. நான் எனது தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். இப்போது சீமான் தான் இங்கே பவர்புல்லாக இருக்கிறார் போல..

எதிரி என்றால் தான் மனவேதனையாக இருந்திருக்கும். நான் வாழ்ந்த நபர் தானே.. பல விஷயங்கள் சொன்னார். இதற்கு மேல் என்னால் சண்டை போட முடியாது. சீமான் மகிழ்ச்சியாக இருக்கட்டும்" என்று கூறினார். விஜயலட்சுமி அளித்த புகாரை வாபஸ் பெற்றதால், சீமானுக்கு இந்த வழக்கில் இனி போலீசார் முன் ஆஜராகவேண்டியிருக்காது எனக் கூறப்பட்டது. ஆனால், நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் வரும் 18 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற போதிலும் சீமான் 18 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று போலீசார் கூறியிருப்பதால், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications