Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆணித்தரமான உச்சநீதிமன்ற தீர்ப்பு - 7தமிழர் விடுதலைக்கான நடவடிக்கையை தொடங்குங்க...சீமான் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில் இனியேனும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவிக்கும் 7 தமிழர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இதனடிப்படையில்தான் அரசியல் சாசனத்தின் 166-வது பிரிவின் கீழ் முந்தைய அதிமுக ஆட்சிக் கால அமைச்சரவை கூடி 7 தமிழரை விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரைத்தது.

ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,. இந்த பரிந்துரையை ஏற்கவில்லை. இது தொடர்பாக சட்ட விவாதங்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. மாநில அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் குட்டு வைத்தது. ஆனாலும் சாக்கு போக்குகளுடன் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 7 தமிழர் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என திமுக அரசு வலியுறுத்தியது. ஆனால் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும் போது ஏன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்கிற சர்ச்சையும் உருவானது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இந்த நிலையில் ஹரியானா மாநில வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 3-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம், கைதிகள் தண்டனை குறைப்பு- ஆளுநருக்கான பரிந்துரைகள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விரிவான கடிதம் அனுப்பி இருந்தார்.

மாநில உரிமையை உறுதி செய்தது

மாநில உரிமையை உறுதி செய்தது

இதனிடையே இது தொடர்பாக இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வலியுறுத்தி உள்ளார். சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரியானா மாநில வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், 14 ஆண்டுகள் தண்டனை முடித்த சிறைவாசிகளின் விடுதலையை மாநில அரசே முடிவுசெய்து அறிவிக்கலாம் எனக் கூறியிருப்பது நம்பிக்கையைத் தருகிறது. 14 ஆண்டுகளுக்கு மேலான காலம் தண்டனை அனுபவித்த சிறைவாசிகளின் தண்டனைக்குறைப்பு மற்றும் விடுதலை குறித்த முடிவை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரமுண்டு என வந்திருக்கும் இத்தீர்ப்பு, ஏழு தமிழர்களின் விடுதலைக்கான முன்நகர்வுக்கு உதவிகரமாக இருக்குமெனப் பெரிதும் நம்புகிறேன்.

ஹரியானா வழக்கு என்ன?

ஹரியானா வழக்கு என்ன?

தண்டனை பெற்றுவரும் சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என அரியானா அரசு, 2008ல் கொண்டு வந்த கொள்கை திட்டத்திற்கெதிராகத் வழக்கு தொடரப்பட்டது. இதில் 14 ஆண்டுகளைக் கடந்த சிறைவாசிகளின் விடுதலை தொடர்பான மாநில அரசின் உரிமையை உறுதிப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். 14 ஆண்டுகளுக்குக் குறைவான காலம் தண்டனையை அனுபவித்த சிறைவாசிகளின் விடுதலைக்கு 161வது சட்டப்பிரிவின்படி ஆளுநரின் ஒப்புதல் தேவை; அதுவும் மாநில அரசின் ஆலோசனைப்படிதான், ஆளுநர் செயல்பட வேண்டும் எனத் தீர்ப்பில் மாநிலங்களின் சிறைத்துறை உரிமையை வரையறுத்து, தெளிவுப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தூக்கு கைதிகள் விடுதலை

தூக்கு கைதிகள் விடுதலை

மேலும், மரணத் தண்டனை சிறைவாசிகளை 14 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்காது விடுவிக்கக்கூடாது என வழிகாட்டியிருக்கிறார்கள் நீதிபதிகள். இதன்மூலம், எழுவர் விடுதலைக்கு இடப்பட்ட மாநில அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் கையெழுத்திடாது; காலந்தாழ்த்தி, அதனைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல்பாடானது சட்டவிதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதும், விடுதலைக்கு இசைவு தர வேண்டியது ஆளுநரின் கடமை என்பதும் மிகத்தெளிவாகப் புலனாகிறது. 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகளை விடுதலைசெய்வது மாநிலங்களின் தார்மீக உரிமை என்பது உச்ச நீதிமன்றத்தீர்ப்பின் வாயிலாக நிலைநிறுத்தப்பட்டிருப்பதன் மூலம் எழுவர் விடுதலைக்கான தடைக்கற்கள் யாவும் நீக்கப்பட்டிருக்கிறது என்றே கருதலாம்.

ஆளுநரின் ஏமாற்று வேலை

ஆளுநரின் ஏமாற்று வேலை

எழுவர் விடுதலை என்பது மாநில அரசால் 161வது சட்டப்பிரிவின் கீழ் கோரப்பட்டுள்ளதாலும், மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என உச்ச நீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்புக் கூறியுள்ளதாலும் தமிழக அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து, விடுதலைக்கு ஒப்புதலைப் பெற்று எழுவரையும் விடுவிக்க வேண்டியதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்க வேண்டியது பேரவசியமாகிறது. ஆகவே, எழுவர் விடுதலை குறித்தான முடிவெடுக்கத் தனக்கு அதிகாரமில்லையெனக்கூறி, அதனை குடியரசுத்தலைவரது பக்கம் தள்ளிவிட்டு, மொத்தமாக மடைமாற்றம் செய்திருக்கும் ஆளுநரின் செயல் ஏமாற்று வேலை என்பது சட்டரீதியாகத் தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியான நிலையில் குடியரசுத்தலைவருக்குக் கோரிக்கை வைக்கும் வெற்று நாடகத்தைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான சட்டநடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் எனவும், சிறைவாசிகளின் விடுதலை குறித்தான முடிவெடுக்கும் மாநிலத்தன்னுரிமை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாக நிலைநாட்டப்பட்டுள்ளதால் எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

அமைச்சரவையில் முடிவு

அமைச்சரவையில் முடிவு

மேலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, தனது அமைச்சரவையைக் கூட்டி, எழுவர் விடுதலையின் முடிவை மீண்டும் உறுதிசெய்ய வேண்டும். அம்முடிவை ஆளுநருக்கு அனுப்பி அவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்தத் துணிய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+