அவதூறு பேச்சு.. சீமானை கண்டிக்காமல் பம்மும் அதிமுக! போஸ்டரில் மட்டும் தான் பெரியாருக்கு இடமா?
சென்னை: தந்தை பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சால் கொந்தளிப்பில் இருக்கிறது தமிழகம். திமுக, காங்கிரஸ் மற்றும் பெரியாரிய உணவாளர்கள் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அதிமுக அமைதி காத்து வருவதாக விமர்சிக்கப்படுகிறது. பெரியாரை கட்சி முன்னோடியாக கொண்ட அதிமுக அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் பெரியாரிஸ்ட்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது தமிழகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என பேசி, அவர் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்," அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகி விடுமா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர் என சீமான் பேசியிருந்தார்.
மேலும் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. சீமானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், திமுக எம்பி கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்ளிட்ட பலரும் சீமானுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது. இதற்கிடையே எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது சீமானின் பேச்சு. புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," பெரியார் மண் என்று பேச வேண்டாம்.. எங்களுக்கு பெரியாரை மண் தான்" எனக் கூறியது பெரியாரிய உணர்வாளர்களின் கோபத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் அவரைக் கண்டித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
சீமானின் பேச்சைக் கண்டித்து கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து திராவிட கட்சிகளும் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூட சீமானை கண்டித்து இருக்கிறார். ஆனால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியும் பெரியாரைக் கொள்கை தலைவராக கொண்ட கட்சி என கருதப்படும் அதிமுக ஆரம்பத்தில் இருந்தே அமைதி காத்து வருகிறது.
சில நேரங்களில் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் லேசாக சீமானை விமர்சிக்கின்றனர். ஆனால் திமுக அளவுக்கு சீமானுக்கு பதிலடியோ கண்டனமோ கொடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக அறிக்கையை கொடுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை சீமானுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 11ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் சீமானின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி," பெரியார் பற்றி சீமான் பேசியது வருத்தத்திற்குரியது. இறந்த பெருந்தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என மட்டுமே தெரிவித்து இருந்தார்.
சீமானை கண்டிக்கிறேன் அல்லது சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும், சீமானுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என எடப்பாடி பதிலளிப்பார் என பெரியாரிய உணர்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பதில் ஏமாற்றத்தையே தந்தது. அதற்கு பிறகு இந்த விவகாரம் நடந்து 20 நாட்கள் கடந்து இருக்கும் நிலையில் ஜெயக்குமார், கேபி முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களே பேசி வருகின்றனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை விமர்சிப்பதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சீமானுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவிக்கும் வகையில் அவர் பேசவில்லை. ஒரு வேலை பாஜகவை போல சீமான் மீதும் சாஃப்ட் கார்னருடன் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறாரா என கேள்வி எழுப்புகின்றனர் பெரியாரிய உணர்வாளர்கள்.












Click it and Unblock the Notifications