கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து.. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போலி சாமியார் சத்திய நாராயணன் கைது
சென்னை: சென்னையில் கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியைத் தொடர் பலாத்காரம் செய்ததாகப் புகாரின் பேரில் சாமியார் சத்திய நாராயணன் என்பவரும் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் இளம்பெண். அவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து விநாயகபுரம் சூரப்பட்டு ரோடு லட்சுமிகாந்த் அம்மாள் தெருவில் உள்ள ஹீரடிபுரம் சர்வ சக்தி பீடத்தில் நிர்வாகியான சத்திய நாராயணன் என்பவரிடம் தனது பாட்டியுடன் சென்றுள்ளார்.

பிளஸ் 2
அப்போது அந்த பெண் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். பின்னர் அடுத்த ஆண்டு பிளஸ் 2 படிக்கும் போது மறுபடியும் அதே ஆசிரமத்திற்கு வந்த அந்த மாணவிக்குச் சத்திய நாராயணனும், அவரது மனைவி புஷ்பாவும் ஜூஸ் கொடுத்துள்ளனர். அதைக் குடித்து மயக்க நிலைக்குச் சென்ற மாணவியைச் சத்திய நாராயணன் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

வெளிநாடு
இதையடுத்து அந்த இளம் பெண் (மேஜரான மாணவி) 2018ஆம் ஆண்டு திருமணமாகி தனது கணவருடன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் அந்த பெண்ணை சாமியார் சத்திய நாராயணன் வலுக்கட்டாயமாக ஆசிரமத்திற்கு வரவழைத்து பல முறை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

கர்ப்பம்
இதனால் கர்ப்பம் அடைந்த அந்த இளம்பெண் ராயபுரத்தில் குழந்தை பெற்றெடுத்தார். மறுபடியும் தனது பாலியல் இச்சைக்கு இணங்க வேண்டும் என அந்த பெண்ணை சாமியார் மீண்டும் மிரட்டியதால் இளம் பெண் காவல் நிலையத்தில் சாமியார் மீது புகார் அளித்தார். இதையடுத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சத்திய நாராணயனையும் அவரது மனைவியையும் கைது செய்தனர்.

புகார்
இது போல் இந்த சாமியாரால் வேறு யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களும் புகார் அளிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். பாலியல் சீண்டல், போலி சாமியார்களின் மாய வலை.. இவற்றில் சிக்கி பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு எப்போது தீர்வு ஏற்படுமோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications