தோளில் இருக்கும் துண்டு போலதான் கூட்டணி..தேவை இல்லையெனில் கழற்றி வைத்துவிடலாம்.. செல்லூர் ராஜூ பளீச்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக பாமக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் கூட்டணி என்பது நாம் தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான். தேவை என்றால் போட்டுக் கொள்ளலாம். தேவையில்லை என்றால் கழட்டி ஓரமாக வைத்து விடலாம் இதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகள் தாமதமாக கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகள் ஆகியவற்றில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பகுதிகளில் விரைவாகத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
இந்நிலையில் தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்மனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது,

பாமக முடிவு
ஊரக உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமகவின் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சி கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாமக அறிவித்துள்ளது.

கட்சியின் வளர்ச்சி
சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்குவதாக பாமக திடீரென அறிவித்துள்ளது பல்வேறு வியூகங்களைக் கிளப்பியுள்ளன. பாமகவின் இந்த அறிவிப்பு குறித்தோ அல்லது கூட்டணி தொடர்பாகவோ அதிமுக தலைமையிடம் இருந்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.

தோளில் போட்டிருக்கும் துண்டு
இந்நிலையில் பாமக அறிவிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், "தேர்தல் கூட்டணி என்பது நாம் தோளில் போட்டிருக்கும் துண்டு போலத் தான். தேவை என்றால் போட்டுக் கொள்ளலாம். தேவையில்லை என்றால் கழட்டி ஓரமாக வைத்து விடலாம். மேலும், சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மட்டுமே கூட்டணி எடுபடும். உள்ளாட்சித் தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் இருக்கும் உள்ளூர் செல்வாக்கைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். எனவே, பாமக வெளியேறியதில் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதேநேரம் கூட்டணியை நம்பி ஒருபோதும் அதிமுக இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெயக்குமார் சாடல்
முன்னதாக பாமக அறிவிப்பு குறித்து அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "அவர்கள் தனித்துப் போட்டியிடுவதால் அதிமுகவுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை. இதனால் பாமகவுக்குத் தான் இழப்பு. கூட்டணியில் நீடிக்க வேண்டுமா இல்லை வேண்டாமா என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அதேநேரம் எங்கள் கட்சியைப் பற்றி விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படியே தொடர்ந்து விமர்சித்து வந்தால், அதற்கு நாங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். சிலருடன் ஏற்பட்டுள்ள எழுதப்படாத ஒப்பந்தம் காரணமாக அவர்கள் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்திருக்கலாம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications