நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவராக ஏற்ற கட்சி அதிமுக -செல்லூர் ராஜூ
சென்னை: நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சி அதிமுக என்றும் ஜாதியை சொல்லி கட்சியை பிளக்க நினைத்தால் அது நடக்காத காரியம் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக தொண்டர்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
அதிமுக காப்பற்றப்பட வேண்டும் என்பதே தன்னை போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் ஒரே எண்ணம் என செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.
”அண்ணாமலை ஒரு ஐபிஎஸ்.. நீங்க 3வது மட்டுமே படிச்சவரு?” செல்லூர் ராஜுவிடம் போனில் பேசிய பாஜக நிர்வாகி
முன்னாள் அமைச்சர்
மதுரை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத ஒரு சிறப்பாக அதிமுகவில் மட்டுமே ஜனநாயகம் காப்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். நாயரையும், பிராமணப் பெண்ணையும் தலைவர்களாக கொண்டு இயங்கிய கட்சி அதிமுக என்றும் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சராக வர முடிந்தது என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என செல்லூர் ராஜூ கூறினார்.
எம்ஜிஆர் -ஜெயலலிதா
செல்லூர் ராஜூ நாயர் என்று குறிப்பிட்டது எம்.ஜி.ஆரை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அதேபோல் பிராமணப் பெண் என்று செல்லூர் ராஜூ கூறியது ஜெயலலிதாவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா இருந்தவரை அம்மா என்ற சொல்லுக்கு மறு சொல் பேசாத செல்லூர் ராஜூ இன்று பிராமணப் பெண் என்று குறிப்பிட்டு ஜெயலலிதாவை சுட்டிக்காட்டும் அளவுக்கு மாறியிருக்கிறார். சாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக என்று கூறும் போது அதற்கு எடுத்துக்காட்டு கூறுவதாக இப்படி பேசியிருக்கிறார்.
கண்டெண்ட் ராஜூ
செல்லூர் ராஜூ பேட்டி என்றாலே அதில் நிச்சயம் கண்டெண்ட்களுக்கு பஞ்சமிருக்காது என்பது ஊடகத்தினரும், பொதுமக்களும் அறிந்த ஒன்றாகும். இதனிடையே அதிமுக தொண்டர்களை அபகரித்துவிடலாம் என எந்த அகில இந்திய கட்சியோ, மாநில கட்சியோ நினைத்தாலும் அது நடக்காது என பாஜகவுக்கு சூசகமாக குட்டும் வைத்துள்ளார். தன்னை பொறுத்தவரை அதிமுக தொண்டர்கள் அமைதி காத்து கட்சியை காக்க வேண்டும் என்பதே ஒரே கோரிக்கை எனக் கூறினார்.
பூதாகரம்
அதிமுகவில் ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் உட்கட்சி விவகாரத்தை பத்திரிகைகள் தான் பூதாகரமாக்கி அதை பெரிதுபடுத்தி விட்டதாகவும் அதிமுகவை பொறுத்தவரை மதச்சார்பற்ற கட்சி என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து ஆசைக்கு தலைவர்கள் வேண்டுமானால் வேறு கட்சிக்கு போகலாம் ஆனால் தொண்டர்கள் யாரும் போகமாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் செல்லூர் ராஜூ.