தமிழகத்திற்கு மோடி அரசு நல்லது செய்யுமா? திமுக கவுன்சிலரின் வீடியோவை பகிர்ந்து செல்லூர் ராஜு கேள்வி
சென்னை: தமிழக மக்களுக்கு மோடி அரசு இனியாவது நல்லது செய்யுமா என திமுக கவுன்சிலரின் வீடியோவை தனது எக்ஸ்வலைதளத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது. இதையடுத்து தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.

அதிமுக, பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுக 35 இடங்களில் வென்றிருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார்.
இதற்கு அண்ணாமலை பதில் கூறிய போது அதிமுகவால் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை,. இதில் கூட்டணி வைத்தால் 35 இடங்களில் வென்றுவிடுவார்களா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக , தமிழகத்தில் ஆட்சியை இழந்தது என அதிமுக நிர்வாகிகள் விமர்சித்து வந்த நிலையில் எஸ்.பி.வேலுமணியின் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு, இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? திமுக கூட்டணி எம்.பிக்கள் குரல் எழுப்புவார்களா? பார்ப்போம்" என பதிவிட்டுள்ளார்.
அதிலும் திமுக கவுன்சிலர் அனிச்சம் கனிமொழியின் வீடியோ பதிவிட்டு செல்லூர் ராஜு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் திமுக கவுன்சிலர் எந்த ஆதாரமும் இல்லாமல் மோடி அரசை குறை செல்றீங்கன்னு சொல்றவங்களுக்கு 2, 3 விஷயத்தை ஞாபகப்படுத்துறேன். மோடி ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் வருமான வரி ஆய்வாளர்கள் என 1300 பேரை நியமித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் கூட தமிழர் கிடையாது.
வருமான வரி கண்காணிப்பாளர்கள் பணிக்கு 172 பேருக்கு பணி கொடுத்திருக்கிறார்கள். அவர்களிலும் ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. அது போல் பாரத ஸ்டேட் வங்கியில் கூட 1500 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. தெற்கு ரயில்வேயில் திருச்சி கோட்டத்தில் மட்டும் 1765 பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் தமிழர்கள் கிடையாது.
குரூப் டி தேர்வில் தமிழர்களின் இரண்டரை லட்சம் விண்ணப்பங்களை மோடி அரசாங்கம் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை எடுத்து போட்டு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி என அவரை புகழ்ந்து எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டிருந்த நிலையில் கட்சி தலைமையின் எதிர்ப்பால் அந்த ட்வீட்டை செல்லூர் ராஜு டெலிட் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications