செல்வப்பெருந்தகை அல்ல.. கூட்டணி பற்றி மத்திய தலைமைதான் முடிவு செய்யும்.. மணி கட்டிய ராகுல் காந்தி
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்கிரஸ் மத்திய தலைமையே முடிவுசெய்யும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நியூஸ் 18 ஊடக குழுமத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில் , நாம் சார்ந்து இருக்கப் போகிறோமா? சுயமாக இருக்கப் போகிறோமா? இன்னும் எத்தனை காலம் சார்ந்தே இருக்கப் போகிறோம்? நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு; எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது

'நாம் எந்த திசையில் செல்லப் போகிறோம்? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும்?' தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை; தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றது; கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுக்கள் திமுகவினர் சிலரை அப்செட் ஆக்கி உள்ளதாம். அதன்படி காங்கிரசில் கருப்பு ஆடு இருப்பதாக திமுகவினர் சிலர் நம்புகின்றனர்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறித்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் காங்கிரசில் சில கருப்பு ஆடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட். கூட்டணியை உரசல் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டு செல்லும் முதலமைச்சரை இழிவுபடுத்தும் விதமாக இப்படி செய்ய கூடாது.
பதிலடி: இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், நேற்று இதற்கு விளக்கம் அளித்த செல்வப்பெருந்தகை, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காக 11.6.2024 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிற முதல் தீர்மானத்தில், 'கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மூலம், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதற்கு தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது பங்களிப்பை தீர்மானத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நான் பேசும் போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கு இலக்கும் இருக்கிறது. அதைப் போல, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி என்று குறிப்பிட்டேன்., என்றார்.
ராகுல் காந்தி விளக்கம்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்கிரஸ் மத்திய தலைமையே முடிவுசெய்யும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நியூஸ் 18 ஊடக குழுமத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.
செல்வப்பெருந்தகை கட்சி தலைமை அல்ல. கூட்டணி குறித்து முடிவுசெய்ய அவரால் முடியாது. தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க மத்திய தலைமை உள்ளது. அதற்கு கட்சியில் வேறு தலைவர்கள் உள்ளனர் என்று ராகுல் காந்தி அதிரடியாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications