குண்டு போட தெரியும்னு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பேசுவதா? இரும்புக்கரம் தேவை! செல்வப்பெருந்தகை ஆவேசம்!
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு
சென்னை: ஓய்வுபெற்ற ராணுவ வீரர் குண்டு போட தெரியும், சுட தெரியுமென்று சமூக அக்கறையில்லாமல், பொறுப்பில்லாமல் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அநாகரீகமான, ஆபத்தான பேச்சுகளை உடனடியாக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அடிதடி பிரச்சனை
பிப்ரவரி 8ஆம் தேதியன்று கிருஷ்ணகிரியில் அண்டை வீட்டார்களுடன் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து ராணுவவீரர் பிரபு அவர்கள், பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இறந்துவிடுகிறார். உடனே, தமிழ்நாடு காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி, வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துள்ளார்கள்.

வீணான பழி சுமத்தி
ஆனால், தமிழ்நாடு பா.ஜ.கவினர், வேண்டுமென்றே இந்த அடிதடி பிரச்சனையை திசைத்திருப்பி, ஆளும் தி.மு.கழக அரசின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் வீணான பழி சுமத்தி அரசியல் லாபம் அடைய நினைக்கின்றார்கள்.

சர்ச்சைப் பேச்சு
இன்று (21.02.2023) தமிழ்நாடு பா.ஜ.கவினர் சென்னையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய ஓய்வுபெற்ற கர்னல் பாண்டியன் அவர்கள், எங்களுக்கும் குண்டு போட தெரியும், சுட தெரியுமென்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தான் ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என்று கருதாமலும், சமூக அக்கறையில்லாமலும், பொறுப்பில்லாமலும் பொதுவெளியில் இதுபோல் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக
இதுபோன்ற அநாகரீகமான, ஆபத்தான பேச்சுகளை உடனடியாக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இல்லாவிட்டால், இவ்வாறு பேசுவது வழக்கமாகிவிடும். மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications