ஆரம்பமே அமர்க்களம்! மாஸ் காட்டிய செல்வப்பெருந்தகை! ஸ்தம்பித்த சத்தியமூர்த்தி பவன் சாலை!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை முறைப்படி இன்று மாலை சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னதாக சத்திய மூர்த்தி பவனுக்கு திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு செல்வப்பெருந்தகை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டிருந்ததால் சத்தியமூர்த்தி பவன் அமைந்துள்ள சாலை ஸ்தம்பித்து காணப்பட்டது. காமராஜர் நினைவு இல்லத்தின் மாதிரி மேடை செட்டிங் அமைக்கப்பட்டு அதில் முன்னாள், இந்நாள் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் பலரும் அமர வைக்கப்பட்டனர்.

இதற்கு முன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர்கள் எல்லாம் சத்தியமூர்த்தி பவனில் உள்ள தலைவர் அறையில் சத்தமின்றி பதவியேற்றுக் கொண்டார்கள். ஆனால் முதல் முறையாக ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் வகையில் தனது பதவியேற்பு வைபத்தை நடத்தி முடித்துள்ளார் செல்வப்பெருந்தகை. மேடையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நடுநாயகமாக அமர வைக்கப்பட்டிருந்தார்.
மற்றப்படி தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்ட பலரும் மேடையின் இடது, வலது புறங்களில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வில் பேசிய மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா, ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட பலரும் தமிழக காங்கிரஸ் புதிய உத்வேகத்துடன் இனி தமிழ்நாட்டில் செயல்படும் என்றும் பாஜகவுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் செல்வப்பெருந்தகை செயல்பாடுகள் இருக்கும் எனவும் பெருமிதம் தெரிவித்தார்கள்.
முன்னதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான ரேஸில் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, விஜயதரணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் இருந்தனர். இதில் செல்வப்பெருந்தகை மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். ஜோதிமணி தனது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் செல்வப்பெருந்தகை பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கார்த்தி சிதம்பரத்தை நிகழ்வில் காணமுடியவில்லை.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே கே.எஸ்.அழகிரிக்கு இணையாக செல்வப்பெருந்தகை சுடச்சுட ஒவ்வொரு விவகாரத்திலும் அறிக்கை வெளியிட்டு கவனம் ஈர்த்து வந்தார். இப்போது தலைவராக பதவியேற்றுவிட்டதால் இனி நாள் தோறும் தமிழக பிரச்சனைகள் குறித்து அவரிடம் இருந்து அறிக்கைகள், கண்டனங்கள், விமர்சனங்களுக்கான பதிலடிகள் வரலாம் எனத் தெரிகிறது.
அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைதள பக்கங்களையும் இனி ஆக்டிவாக இயங்க வைப்பதற்கான வேலைகளில் செல்வப்பெருந்தகை கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வப்பெருந்தகைக்கு உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் நிலவும் கோஷ்டிப்பூசலை சரி செய்வது தான்.












Click it and Unblock the Notifications