கார் மாறி மாறி! பட்டினம்பாக்கம் செல்ல படாதபாடு! செங்கோட்டையனை பிக்கப் செய்த ஆதவ்வின் ரேஞ்ச் ரோவர்
சென்னை: தலைமைச் செயலகத்திற்கு சென்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனை மீடியாக்கள் தொடர்ந்து பாலோ செய்வதால் அவர் பல்வேறு கார்களில் மாறி மாறி பயணிக்க வேண்டிய சூழல் எழுந்தது. விஜய்யின் பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு செல்வதற்காக எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்த செங்கோட்டையனை ஆதவ் அர்ஜுனாவின் கார்தான் பிக் அப் செய்ய சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் நவ 27 ஆம் தேதி இணைகிறார் என சொல்லப்பட்டது. இது பொய்யாக இருக்குமோ என பலர் விவாதித்து வந்தனர். இந்த நிலையில் குள்ளம்பாளையத்தில் இருந்து சென்னைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்த அவர், ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தலைமைச் செயலகத்திற்கு தனது இன்னோவா காரில் காலை 8.30 மணிக்கு செங்கோட்டையன் புறப்பட்டார். அப்போது அவரை மீடியாக்கள் பின்தொடர்ந்தால் 15 நிமிடங்களில் மீண்டும் வீட்டிற்கே சென்றார்.
இதையடுத்து சிறிது நேரம் போக்கு காட்டிய செங்கோட்டையன், மீண்டும் நேற்று காலை 11.30 மணிக்கு அதே காரில் தலைமைச் செயலகத்திற்கு சென்றார். அங்கு சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இதையடுத்து எம்எல்ஏ விடுதிக்கு சென்ற செங்கோட்டையன், தன்னை மீடியாக்கள் பாலோ செய்வதை அறிந்தார். இதையடுத்து அங்கிருந்து வேறொரு காரில் புறப்பட்டார். இந்த நிலையில் தவெகவில் இணைவது உறுதியான நிலையில் விஜய்யை தனியே சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.
இதற்காக ஆதவ் அர்ஜுனாவின் ரேஞ்ச் ரோவர் கார் செங்கோட்டையனை பிக் அப் செய்து கொண்டு பட்டினம்பாக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு செங்கோட்டையன் வருவதற்கு முன்பே புஸ்ஸி ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி, விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் இருந்தனர்.
பின்னர் 6.30 மணி வரை அதாவது 2 மணி நேரம் விஜய்யுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன், ஆதவ்வின் ஒரே பதிவு எண் கொண்ட வேறொரு காரில் புறப்பட்டுச் சென்றார்.
இதைத் தொடர்ந்து இன்றைய தினம் விஜய்யின் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களான சத்தியபாமா, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருடன் இணைந்தார்.
செங்கோட்டையனை திமுகவில் சேர்க்க பகீரத பிரயத்தனம் செய்து அது நடக்கவில்லை. எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன், திமுகவில் சேராதது ஆச்சரியமில்லை. அதே வேளையில் செங்கோட்டையன் தவெகவில் இணைப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு, "அவர் இணைந்ததற்கு அவரை போய் கேளுங்கள்" என கோபத்துடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications