மௌனம் கலைத்த செங்கோட்டையன்.. சைலன்ட் மோடில் எடப்பாடி பழனிச்சாமி! கணக்கு தப்பாகுதாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது விவாதமாக வெடித்திருக்கிறது. இதனால் எதிர்வரும் தேர்தல் குறித்து எடப்பாடி போட்ட கணக்கும் தவறாக வாய்ப்பு இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுவிழா எடுக்கப்பட்டிருந்தனது. விவசாயிகள் குழுதான் இதனை முன்னெடுப்பதாக சொல்லப்பட்டாலும், நிகழ்ச்சியை நடத்தியது வேலுமணி தரப்புதானாம். இதில், செங்கோட்டையன் பெயர் இரண்டாவது இடம் பிடித்திருந்ததுதான் பிரச்சனை.

இதற்கு பிறகு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது, அப்படி ஏதும் இல்லையே என்று மழுப்பிவிட்டார். என்னதான் நடக்கிறது? ஏன் இந்த மோதல் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மோதலுக்கு முதல் காரணம், எடப்பாடியின் ஒதுக்குதல்தான் என்கிறார்கள் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள். "எடப்பாடிக்கு முன்னாடியிருந்தே எங்க தலைவரு எம்எல்ஏவா இருக்காரு. ஆனால் இப்போது இருக்குற இடம் கூட தெரியல" என குமுறகிறார்கள். செங்கோட்டையனை பொறுத்தவரை எந்த பெரிய சர்ச்சைகளிலும் சிக்காதவர். கட்சிக்குள்ளும், வெளியேயும் குட் நேம் இருக்கிறது. எம்ஜியார் காலத்து அரசியல்வாதி. கொங்கு மாவட்டத்தில் அப்படி ஒரு செல்வாக்கு.
ஜெயலலிதா இறந்த பின்னர் நடந்த மாற்றங்களில் கட்சி சசிகலாவிடம் வந்தது. ஆனால் முதல்வராக முடியவில்லை. இருப்பினும் செங்கோட்டையனை தலைமைக்கு கொண்டுவர முயன்றார். எடப்பாடி முந்திக்கொண்டதால் அதுவும் முழுமையாக நிறைவேறாமல் போய்விட்டது. எனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியை வாங்கிக்கொடுத்து, அமைச்சரவையில் முக்கிய ஸ்தானத்தில் செங்கோட்டையனை அமரவைத்தார். ஒரு உறையில் இரண்டு வாள் எப்படி?
எடப்பாடியின் கணக்கு இங்கிருந்துதான் தொடங்கியது. 1991-1996ல் சென்னை லஸ் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் செங்கோட்டையனுக்கு ஒரு வீடு இருந்தது. அது அதிமுக தொண்டர்களுக்கான வீடு. செங்கோட்டயனை சந்திக்க வேண்டுமெனில் இங்கு வந்தால் போதும். தொண்டர்கள் கூட்டம் அலை மோதும். அதில் எடப்பாடியும் ஒருவரா இருந்திருந்தார். ஆனால் எடப்பாடி முதல்வரான பிறகு, செங்கோட்டையன்தான் தனக்கு பிரதான போட்டியாளராக கருத்திக்கொண்டார் என சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலையில் எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் பேச்சுவார்த்தையை நடத்தினர். இந்த 6 பேருக்கு தலைமை செங்கோட்டையன்தான். இதுதான் இருவருக்கும் இடையேயான நேரடியான மோதலுக்கான தொடக்க புள்ளி.
அடுத்தடுத்து கட்சி பொறுப்புகளில் மாற்றங்கள் சூடுபிடிக்க தொடங்கின. செங்கோட்டையனுக்கான முக்கிய பொறுப்புகள் பறிக்கப்பட்டன. சொந்த மாவட்டத்திலேயே கள ஆய்வாளராக வேலுமணி நியமிக்கப்பட்டது துரோகத்தின் உச்சமாக செங்கோட்டையன் டீம் கருதியது. எனவேதான் தற்போது செங்கோட்டையன் வெடிக்க தொடங்கியுள்ளார். சாதாரணமாக பேசி முடிக்க வேண்டிய விஷயம், ஆனா ஈகோ காரணமாக பிரளமாக மாறப்போகுது என விவரமறிந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டையனை ஓரம் தள்ளிவிட்டு, வேலுமணியை வைத்து ஆக வேண்டியதை பார்த்துக்கொள்ளலாம். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது, அதற்கான பணிகளில் செங்கோட்டையன் விஷயம் மறைந்துவிடும் என்று எடப்பாடி கணக்கு போட்டதாகவும், ஆனால், செங்கோட்டையன் வழக்கமாக மௌனமாக இல்லாமல் வாய் திறந்திருப்பது, எடப்பாடியின் கணக்கை தப்பு கணக்காக்கியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications