"பத்துக் கட்சி பண்ருட்டி"...ஜெயலலிதா குறித்த பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து- ஜெயக்குமார் பாய்ச்சல்!
சென்னை: ஊழல் வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்பது உண்மைதான் என கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் அணியின் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என அண்ணாமலை விமர்சித்ததைக் கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. அண்ணா குறித்த விமர்சனத்துக்கும் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

அத்துடன் தமிழ்நாடு முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தர முடியாது எனவும் அண்ணாமலை கூறினார். இதனால் கொந்தளித்த அதிமுக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. ஆனால் இது ஒரு நாடகம் என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.
பாஜகவுடனான கூட்டணி முறிவு: இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, பாஜகவுடன் 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதிமுக தலைமையில் லோக்சபா, சட்டசபை தேர்தலில் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் கேபி முனுசாமி அறிவித்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து: இந்நிலையில் சென்னையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம் கொடுத்தார். அண்ணாமலை கூறியதை நியாயப்படுத்தும் வகையில், ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்- அது Fact என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன். அதே பிரஸ் மீட்டில், பெங்களுர் புகழேந்தி, பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த கருத்தை மறுத்து, நீதிபதி குமாரசாமியால் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர் ஜெயலலிதா என்றார்.

பத்துக் கட்சி பண்ருட்டி: இந்த சர்ச்சை தொடர்பாக வியாழக்கிழமை நள்ளிரவு தமது எக்ஸ் பக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டுள்ளதாவது: பத்துக்கட்சி பண்ருட்டி அம்மா குறித்து அண்ணாமலை பேசிய கருத்தை 'It is a fact' என சொல்கிறார். அடுத்தவர் பேச அமைதி காத்தார். அருகில் இருப்பவரை பேசவும் அனுமதிக்கிறார் இந்த நடிப்பின் நாயகன். தாயை பழிப்பதை மகிழ்வோடு தாலாட்டு கேட்பதை போல கேட்கும் சுயநலவாதி பன்னீர்செல்வம். இவ்வாறு ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications