Exclusive “எனக்குள் கறுப்பு சிவப்பும் இருக்கு.. திமுக ஆட்சியில் குறையே இல்லை”: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியில் சில முணுமுணுப்புகள் கிளம்பி உள்ளன. ஆனால், மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிரமாக திமுகவை ஆதரித்துப் பேசி வருகிறார். அவரது இந்த நிலைப்பாடு குறித்து ஒன் இந்தியா தமிழ் மேற்கொண்ட சூடான நேர்காணல் இங்கே..!
கேள்வி: தமிழ்நாட்டில் ஸ்டாலின் இருக்கிறார், எனவே காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் இங்கு தேவையில்லை என மேலிடமே நினைக்கிறதோ?

ஈவிகேஎஸ் இளங்கோவன்: காங்கிரஸ் கட்சியில் காமராஜருக்குப் பிறகு மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர் வரவில்லை. மூப்பனாரோ, வாழப்பாடி ராமமூர்த்தியோ, குமரி அனந்தனோ, திருநாவுக்கரசரோ, இளங்கோவனோ காமராஜரின் இடத்தை அடைய முடியவில்லை. காமராஜர் பெற்றிருந்த மக்கள் செல்வாக்கை யாராலும் பெற முடியவில்லை. அதற்காக, கட்சியை இங்கு வளர்ப்பதற்கு பாடுபட வேண்டும் என்பதை ஏற்கிறேன்.
1967க்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகளே ஆளும் நிலைமை இருக்கிறது. தமிழ்நாட்டில் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவர் வர வேண்டும். அதை ராகுல் காந்தி விரைவில் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் வளர்க்கும் வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால், நமக்கு இப்போது தொடர் வெற்றியை தந்து கொண்டிருக்கிற கூட்டணியின் தலைமைக் கட்சியை விமர்சிப்பது என்பது தவறு.
அதிமுக புனிதமாகிவிடுமா?: பாஜகவுடன் இவ்வளவு நாளாக கூட்டணி வைத்து, சிறுபான்மையின மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு, திடீரென நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம், எங்களுக்கு பாவ மன்னிப்பு தாருங்கள் எனக் கேட்டால் யாராவது தருவார்களா? அதிமுகவில் இருக்கும் பலரின் குடுமி மோடியின் கையில் இருக்கிறது. இவர்கள் ஓரளவுக்கு மேல் பாஜகவை எதிர்க்க மாட்டார்கள். பாஜக கூட்டணியை விட்டு விலகியதன் காரணமாகவே அதிமுக புனிதமாகிவிட்டது என்பதை ஏற்க முடியாது.
இன்றைக்கு திமுகவுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் எப்படி ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளதோ, ஸ்டாலினை சந்திக்க வரும் ராகுல் காந்தி சாலை தடுப்புச் சுவரை தாண்டிக் குதித்துச் சென்று இனிப்பு வாங்கிக்கொண்டு தனது அண்ணன் ஸ்டாலினை சந்தித்து சகோதரப் பிணைப்பை வெளிப்படுத்தினாரோ, அதுபோல ஒருகாலத்தில் அதிமுக - காங்கிரஸ் இடையே இருந்தது. ஆனால், சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா விமர்சித்ததோடு அந்த உறவு முறிந்துவிட்டது. இப்போது ஸ்டாலின் - ராகுல் காந்தி இடையே இருக்கும் உறவு காங்கிரஸ் - அதிமுக இடையே வருவதற்கு வாய்ப்பில்லை.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு எதிராளிகளே இல்லை என்ற நிலை வரும். மக்களுக்கு தொடர்ந்து நல்லதைச் செய்தால் மக்கள் தொடர்ந்து வாக்களிப்பார்கள்.
கேள்வி: திமுக அரசுக்கு எதிராக ஒரு முணுமுணுப்பு கூட காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வரவில்லையே?
ஈவிகேஎஸ் இளங்கோவன்: இந்த ஆட்சியில் திமுக அரசு என்ன தவறு நடந்தது? எதை எதிர்க்க வேண்டும்? கள்ளச்சாராயம் காங்கிரஸ் காலத்தில் இருந்தது, பிரிட்டிஷார் காலத்தில் இருந்தது. கொலை, கொள்ளைகள் எல்லாம் மனிதன் உருவான காலம் தொட்டே இருக்கிறது. விலங்குகளை அடித்து மனிதன் சாப்பிடும் நிலை இருந்தபோதே மனிதனோடு மனிதன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். என்ன புதிதாக நடந்துவிட்டது? அதனை எதிர்ப்பதற்கு?
கேள்வி: உங்கள் கதர் ஆடையைத் தாண்டி, சட்டையில் கறுப்பும் சிவப்பும் தெரிகிறதே..
ஈவிகேஎஸ் இளங்கோவன்: நான் கறுப்பில் தோன்றியவன் தான். பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் காங்கிரஸ் கட்சிக்காரன். சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கை கொண்டவன். பெரியார் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி இங்கு வேரூன்ற முடியுமா? தமிழகத்தில் பெரியார் இன்றி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? என்னிடத்தில் கறுப்பு சிவப்பையும் பார்க்கலாம், மூவர்ணத்தையும் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications