மந்திரியாக, முதல்வராக உதயநிதி அண்ணா வரவேண்டும்...சீனியர் அமைச்சர் மருமகள் ஓபன் டாக்!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி கடுமையாக உழைப்பதால் அவருக்கு பெரிய பதவி வந்தே தீரும்! இந்த நாட்டின் மந்திரியாக, வருங்காலத்தில் முதலமைச்சராக வேண்டும் என்பதெல்லாம் எங்கள் ஆசை என மூத்த அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மருமகள், சமூக வலைதளத்தில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினால் திண்டுக்கல் தீரர் என போற்றப்பட்டவர் திமுக துணைப் பொது செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் முப்பெருந்துறைகளின் அமைச்சராக பதவி வகித்த ஐ.பிக்கு கூட்டுறவு துறை மட்டும் ஒதுக்கப்பட்டதில் தொடக்கம் முதலே அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுவது உண்டு. இதனை முன்வைத்து பல்வேறு கருத்துகள் அவ்வப்போது உலா வரும்.

ஐ.பெரியசாமி குடும்பம்
ஐ.பெரியசாமியின் மகன், ஐபி செந்தில்குமார் பழனி தொகுதி எம்.எல்.ஏ. அத்துடன் திண்டுக்கல் கிழக்கு திமுக மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். அண்மையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜனுக்கும் சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் இடையே கூட்டுறவு துறை தொடர்பான மோதல் பகிரங்கமாக வெடித்திருந்தது. அப்போதும் திமுக தலைமை சீனியரான ஐ.பெரியசாமி என்ற ஐபியார் பக்கம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஐபி மருமகள் மெர்சி
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகள், எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக பதிவிட்டிருப்பது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சீனியர் அமைச்சர் வீட்டில் இருந்து வெளிப்படையாக இப்படி ஒரு குரல் பகிரங்கமாக வெளிப்பட்டிருப்பது உன்னிப்பாகவும் கவனிக்கப்பட்டு வருகிறது.

அனைவரையும் ஈர்ப்பவர் உதயநிதி அண்ணா
மெர்சி செந்தில்குமாரின் ஃபேஸ்புக் பதிவு: 27 வருடங்களுக்கு முன்பு இருந்து ,பார்க்கும் பொழுதெல்லாம் அண்ணே நீங்க படம் நடிக்கனுனே அரசியலுக்கு வரனுனேன் சொல்லிகிட்டே இருப்போம் ...புன்னகையோடு கடந்து செல்வீர்கள் . ஒரு பந்தா இல்லாத மிக எளிமையாக இருக்க கூடிய மனிதர் . உங்கள் மனைவி உங்களுக்கு ஏற்றார் போல மிகவும் எளிமை .திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் அண்ணனுடன் புகைபடம் எடுக்க ஆசையாக ஓடோடி வருவோம் அன்புடன் கூப்பிடுவீர்கள். உங்கள் படத்துக்கு பிறகு எங்கள் மகனுக்கு ஆதவன் என தலைவர் பெயர் சூட்டினார். ஆதவன் சென்னை வருவதே உங்களை பார்க்க தான். கொரானா காலத்தின் போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும் தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான். நீங்கள் திண்டுக்கல் வந்தால் உங்களை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பான். அவன் தந்தையிடம் கூறுவான் . அவர் அதை கண்டுகொள்ளாத போது உங்களுடன் யார் வந்திருப்பார்கள் என அறிந்து அவர்களிடம் என்னை உதய் மாமாவிடம் கூட்டிட்டு போங்கள் என சொல்லான் ஆதவன் . இப்படி குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோர்க்கும் வாய்த்து விடாது அண்ணே !

மந்திரியாக, முதல்வராக
யாரை பற்றி யார் கூறினாலும் அப்படியே ஏற்று கொள்ளாமல் உங்களுக்கு அவர்கள் மேல் என்ன பார்வை உள்ளது என தெளிவாக பிரித்து பார்க்கும் தலைவன் குணம், உங்கள் தாத்தாவை போல் உள்ளது. கடுமையாக உழைக்கிறீர்கள்- உங்களுக்கு இந்த பதவியை விட மிக பெரிய பதவி வந்தே தீரும் ! நீங்கள் இந்த நாட்டின் மந்திரியாக வேண்டும் !வருங்காலத்தில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதெல்லாம் எங்கள் ஆசை ! இவையெல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக நடந்தேயாகும்! உங்கள் உழைப்புக்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் தொழி்ழையும் ஆசிர்வதிப்பாராக. இவ்வாறு மெர்சி செந்தில்குமார் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications