தமிழக புதிய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அபய் குமார் சிங் ஐபிஎஸ் நியமனம்.. யார் இவர்? முழுவிபரம்
சென்னை: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அபய் குமார் சிங் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி பிரிவு ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த இவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இவர் யார்? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
அதன்படி சிபிசிஐடி பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வரும் அபய் குமார் சிங், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னையில் தமிழ்நாடு போலீசின் தலைமையகத்தில் நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த வெங்கடராமன், சிபிசிஐடி பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அபய் குமார் சிங்: மேலும் சென்னையில் ஆபரேஷன் ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த பால நாக தேவி, சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் தலையைகத்தின் நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மேலும் 2 ஏடிஜிபிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய இந்த அதிரடியான இடமாற்றத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்வென்றால் சிபிசிஐடி ஏடிஜிபி அபய் குமார் சிங் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது தான்.
முக்கிய பிரிவு: ஏனென்றால் இது போலீஸ் துறையில் முக்கியமான பொறுப்பாகும். மாநிலத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு செய்வது, ஊழல் செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவற்றில் இவரது பங்கு முக்கியமாகும். இந்த பொறுப்பில் பணியாற்றி வந்த கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில் அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அபய் குமார் சிங் யார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதற்கு விடை அளிக்கும் வகையில் தான் இந்த செய்தி உள்ளது.
1992 பேட்ச் அதிகாரி: அபய் குமார் சிங் பீகாரை சேர்ந்தவர். இவர் 1992 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் இவர் மதுரை எஸ்பியாகவும், ராமநாதபுரம் துணை ஐஜியாகவும், திருநெல்வேலி போலீஸ் கமிஷனராகவும், சென்னை மாநகர தெற்கு மண்ட கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில்: மேலும், தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட்டின்(TNPL) தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தார். மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பணியாற்றி பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற பிறகு அபய் குமார் சிங் தான் அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு சிபிசிஐடி ஏடிஜிபியாக அபய் குமார் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்புக்கான கண்காணிப்பு பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக மாஜி அமைச்சர்கள் வழக்கு: தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு பல அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையே தான் ஐபிஎஸ் அதிகாரியான கந்தசாமி ஓய்வு பெற்றார். தற்போது அபய் குமார் சிங் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதால் இவரது அடுத்த நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? என்ற எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications