திமுக எம்.எல்.ஏ மறைவால் காலியான சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா?
சென்னை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பொன்னுசாமி இன்று உயிரிழந்ததால் சேந்தமங்கலம் தொகுதி காலியாகி உள்ளது. எனினும், தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் திமுக உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் பொன்னுசாமி. இவர் நேற்று வழக்கம்போல் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்குச் சென்று இரவு உறங்கிய நிலையில், இன்று அதிகாலை திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை கொல்லிமலை செம்மேடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

எம்.எல்.ஏ காலமானார்
அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேற்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சேந்தமங்கலம் அடுத்த நடுக்கோம்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவிற்கு திமுக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவரது மறைவு திமுகவினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்னுசாமியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பொன்னுசாமி
பொன்னுசாமி கடந்த 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவிலிருந்து இணைந்தார். தொடர்ந்து 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். 2011, 2016 சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்எல்ஏ ஆனார்.
இடைத்தேர்தல் நடக்குமா?
சேங்கமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமி மறைவால் அந்த தொகுதி காலியாகி உள்ளது. பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர், ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அல்லது பதவி விலகிவிட்டால், அந்தக் காலியிடத்தை நிரப்ப இடைத்தேர்தல் நடத்தப்படும். பொதுவாக 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். எனினும், தமிழகத்தில் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
கடந்த 2021ல் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்ற பின்னர், 4 முறை இடைத்தேர்தல் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறையும், விக்கிரவாண்டி, விளவங்கோடு சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது.
4 இடைத்தேர்தல்கள்
2023-ல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா இறந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார்.
2024 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, பாஜகவுக்கு தாவி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பெர்ட் வெற்றி பெற்றார்.
மேலும் 2025-ல் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.முன்னாள் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால் இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications