பாட்டிலுக்கு 10 ரூபாய்.. ஆவணங்களை அமுக்கிய அமலாக்கத்துறை? டெல்லிக்கு பறந்த செந்தில் பாலாஜி.. சண்டையா?
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் திடீர் பயணமாக டெல்லி சென்ற செந்தில் பாலாஜி அதிகாலையில் சென்னை திரும்பியுள்ளது பல விவாதங்களை கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சில்லறை மது விற்பனை கடைகள் இருக்கிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.

இதில் நிர்ணயத்தை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை , ஆகிய பகுதிகளில் சோதனை சனிக்கிழமை வரை நீடித்தது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறியிருந்தது. இது தொடர்பாக தமிழக பாஜக போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தது. இதற்கிடையில் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி திடீரென டெல்லி சென்று இருக்கிறார். நேற்று மாலை டெல்லிக்குச் சென்ற அவர் இன்று அதிகாலையிலேயே சென்னை திரும்பி இருக்கிறார்.
டாஸ்மாக் முறைகேட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்திருக்கும் நிலையில் ஆளுநரின் டெல்லி பயணமும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் துறை சார் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். ஆனால் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜி டெல்லி சென்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் வழக்கறிஞர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்களுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்கள், கல்லூரிகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தொடர்ந்து ரொக்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அன்றைய இரவே ஜெகத்ரட்சகனுடன் துரைமுருகன் டெல்லி சென்று இரவோடு இரவாக சென்னை திரும்பினார். தற்போது செந்தில் பாலாஜியும் அதேபோல சென்று திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications