மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள்.. தமிழகத்தில் 100 இடங்கள் தேர்வு.. அமைச்சர் தகவல்
சென்னை: தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையை எதிர்கொள்ள முதல்வர் வழிகாட்டுதல்படி முன்னெச்சரிககை நடவடிக்கை எடுக்கப்பட்டு எந்தவித சிரமமும் இன்றி மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காவிரி ஆறு
காவிரி ஆற்றில் வெள்ளம் செல்லும் சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீரானவுடன் மின் இணைப்பு வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்றால் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் 150 மின்மாற்றிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

234 தொகுதிகள்
விரைவில் அங்கு சீரான மின்விநியோகம் செய்யப்படும். 234 தொகுதிகளிலும் சீரான மின்விநியோகத்தை உறுதிப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் கி.மீ. மின் கம்பிகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் மற்றும் சப்ஸ்டேஷன்கள் உள்ள இடங்களின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். அண்ணாமலைக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

நிர்மலா சீதாராமன்
நான் கடந்த முறை அளித்த பேட்டியில் கேட்ட கேள்விகளுக்கு அவரிடம் இருந்து விடை பெற்றுவாருங்கள், அதன் பிறகு அவர் கேட்பதாக நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் விடை அளிக்கிறேன் என்றார் செந்தில் பாலாஜி. நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க மின்சார பைக்குகளின் பயன்பாடு அதிகரிக்கப்படும். அவற்றிற்கான சார்ஜிங் நிலையங்கள் நெடுஞ்சாலைகளில் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications