சஞ்சய் தத், நக்கீரன் கோபால்.. கேஸ் ஹிஸ்டரிகளை எடுத்து வைத்த என்.ஆர்.இளங்கோ.. ஆடிப்போன அமலாக்கத்துறை!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தொடர்பான விசாரணையில் இன்று பழைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதம் வைத்தார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ. நடிகர் சஞ்சய் தத், நக்கீரன் கோபால் வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பாயிண்டுகளை அடுக்கினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார். அவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் இருந்து வருகிறார். இதற்கிடையே சட்ட விதிமுறைகளின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வில்லை என்றும், இடைக்கால ஜாமின் வழங்கிடவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த 15ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தது. இருப்பினும், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
பல தீர்ப்புகளை கோட் செய்த என்.ஆர்.இளங்கோ: அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் உள்ளது என்றும் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் தான் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை என்றும் நேற்றைய உச்சநீதிமன்ற விசாரணையை மேற்கோள் காட்டி செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடினார்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பலவற்றைச் சுட்டிகாட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்தார்.
சஞ்சய் தத் வழக்கு: வழக்கறிஞர் அப்பாஸ் என்ஐஏவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டு, இதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதை இளங்கோ குறிப்பிட்டார். தொடர்ந்து சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருந்தால் ஆட்கொணர்வு மனு தொடரலாம் என்று நடிகர் சஞ்சய் தத் வழக்கில் உச்ச நீதிமன்றம் 1994ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டினார் என்.ஆர்.இளங்கோ.
மேலும், சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று நக்கீரன் கோபால் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கைதுக்கான காரணங்களை தெரிவிக்காமல் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15ஏ பிரிவை அம்பேத்கர் சேர்ந்திருக்கிறார்.
செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியது அடிப்படை உரிமை. நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.

நவ்லகா வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது. அரசியல் சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் எல்கார் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் நவ்லகா வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சுட்டிக் காட்டிய என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் என்பதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.
மேலும், ஆட்கொணர்வு மனு ஜூன் 14 காலை 10.30 மணிக்கே தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நீதிபதி மாலை 5.30 மணிக்கே செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கோரும் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாங்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இயந்திரத்தனமாக நிராகரித்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அதிர்ந்த அமலாக்கத்துறை: என்.ஆர்.இளங்கோ மேற்கோள் காட்டிய பல்வேறு வழக்கின் தீர்ப்புகளால் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் அதிர்ந்து போயினர். ஒருகட்டத்தில் ஆட்கொணர்வு வழக்கில் இவ்வளவு நீண்ட வாதம் அவசியமா என்ற கேள்வியை முன்வைத்தது அமலாக்கத்துறை தரப்பு.
அதற்கு, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கிற்கு அவசியம் என்பதாலேயே பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவை அமலாக்கத்துறை பின்பற்றவில்லை எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications