குறுகிய காலத்தில் ஸ்டாலினின் நம்பிக்கை நட்சத்திரமான செந்தில் பாலாஜி.. அரவக்குறிச்சியில் வெற்றி
Recommended Video
சென்னை: கட்சி தாவிய குறுகிய காலத்திலேயே ஸ்டாலின் மனதில் இடம் பிடித்து அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் சீட் வாங்கிய செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக சார்பில் இரு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அதில் ஒரு முறை போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதையடுத்து சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

திமுகவுக்கு தாவல்
இதைத் தொடர்ந்து தினகரன் தொடங்கிய அமமுக கட்சியில் இணைந்து பணியாற்றியிருந்தார். பின்னர் திடீரென திமுகவில் ஸ்டாலினை சந்தித்து இணைந்தார்.

செந்தில் பாலாஜி
இதையடுத்து லோக்சபா தொகுதியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுக சார்பில் சில கூட்டங்களை ஏற்பாடு செய்வதில் செந்தில் பாலாஜி, ஸ்டாலினை கவர்ந்தார்.

முன்னிலை
பின்னர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து தொகுதி முழுவதும் பம்பரம் போல் சுழன்ற செந்தில் பாலாஜி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வந்த போதிலிருந்தே முன்னிலை பெற்று வந்தார்.

வெற்றி வாய்ப்பை பெறுவாரா
இந்த முறை அரவக்குறிச்சியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படுவாரா செந்தில் பாலாஜி என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை மெய்பித்து காட்டி விட்டார் செந்தில் பாலாஜி. இவர் 85,688 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 55,188 வாக்குகளை பெற்றார். இருவருக்குமிடையே உள்ள வாக்கு வித்தியாசம் 30,500 ஆகும். மிக குறுகிய காலத்திலேயே ஸ்டாலின் மனதில் இடம் பிடித்த செந்தில் பாலாஜி, மக்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications