இந்தியாவிலேயே முதல்முறை.. சென்னை அருகே சித்தா மருத்துவப் பல்கலைக்கழகம்: அமைச்சர் மா.சு அறிவிப்பு
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாகச் சித்த மருத்துவத்தைப் போற்றும் வகையில் சித்த மருத்துவத்துக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் அறிவித்துள்ளார்,
தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு சட்டசபையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பில், "ரூ 4,280 கோடி ரூபாய் செலவில் வட்டார அளவிலான மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.
தமிழகத்தின் பழமையான மருத்துவ முறையான சித்த மருத்துவத்தைப் போற்றும் வகையில் சித்த மருத்துவத்துக்கென தனிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாகச் சித்த மருத்துவமனைக்குத் தனியாகச் சென்னைக்கு அருகில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்.
முதல்வர் தொடங்கி வைத்த 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் ரூ 258 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கப்படும். 19 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக மாற்றப்படும்" என்று அவர் அறிவித்தார்.











Click it and Unblock the Notifications