கந்து வட்டி புகாரில் சிக்கிய நடிகை ஜெயலட்சுமிக்கு சீட் கொடுத்த பாஜக.. எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சென்னை: சென்னை பாடியில் 90 ஆவது வார்டில் சீரியல் நடிகை ஜெயலட்சுமி பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டி வருகின்றன.
வடை சுட்டு, பஜ்ஜி போட்டு, பூ கட்டி, டீ ஆற்றி, காய்கறிகளை விற்று என வேட்பாளர்கள் வினோதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக சார்பில் சென்னை பாடி 90 ஆவது வார்டில் களம் காண்கிறார் சீரியல் நடிகை ஜெயலட்சுமி.

பாடி 90 ஆவது வார்டு
இவர் பாடி 90-ஆவது வார்டுக்குள்பட்ட பாடிகுப்பம் சாலையில் திருவல்லீஸ்வரர் நகரில் வாக்கு சேகரிக்கும் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தான் யாரையும் போட்டியாக கருதவில்லை என்றும் நிச்சயம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுநவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

வார்டு மக்கள்
மேலும் இவரை சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் சினேகம் அறக்கட்டளையை நடத்தி வரும் நபராகவும் அந்த வார்டு மக்களால் அறியப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வார்டு மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் ஓடி வந்து உதவிகளை செய்துள்ளேன். இது நிறைய பேருக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாடியில் தாமரை மலரும்
தாமரையை பாடியில் மலர வைத்தே தீருவேன் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகளோ இவரை விமர்சனம் செய்து வருகிறார்கள். அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாடியை சேர்ந்த கீதா என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

கந்து வட்டி புகார்
அதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாக கூறினார். இதையடுத்து சில நாட்கள் கழித்து எங்களது விண்ணப்பங்கள் கேன்சல் ஆகிவிட்டதால், தொழில் தொடங்க தேவையான பணத்தை தானே தருவதாக கூறினார். அந்த பணத்திற்கு வட்டியும் அசலும் செலுத்தி விட்ட நிலையில் இதுவரை செலுத்தியது வட்டி என்றும் மேலும் அசலை செலுத்த வேண்டும் என மிரட்டுகிறார் என ஜெயலட்சுமி மீது கந்து வட்டி புகார் அளிக்கப்பட்டது.

பொய் புகார்
இந்த நிலையில் கந்து வட்டி கேட்பதாக தன் மீது பொய் புகாரை கூறியதாக பெண் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயலட்சுமியும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது போல் கந்துவட்டி புகாருக்குள்ளான ஜெயலட்சுமிக்கு சீட் கொடுத்ததை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. கடந்த சட்டசபை தேர்தலின் போது பாஜகவில் இணைந்த ரவுடிகள் என அப்போது ஸ்டாலின் பட்டியலையே வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அந்த பட்டியலில் தமிழகம், புதுவையை சேர்த்து 8 பேரது பெயர்களையும் அவர்கள் மீதான புகார்களையும் குறிப்பிட்டிருந்தார். அதில் முதலிடத்தில் புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை, கல்வெட்டு ரவி, புதுவை எழிலரசி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அண்மையில் படப்பை ரவுடி குணாவின் மனைவி பாஜக மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெறுவது போன்ற புகைப்படம் வெளியானது. ரவுடிகள், குற்றப் பின்னணியில் உள்ளவர்களை தங்கள் கட்சியில் பாஜக இணைத்து கொள்வது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட்டை கொடுப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications