செரோ சர்வே முடிவு.. தமிழ்நாட்டில் 70% பேரின் ரத்தத்தில் கொரோனா ஆண்டிபாடி.. எந்த மாவட்டத்தில் அதிகம்?
சென்னை: தமிழ்நாட்டில் மாநில சுகாதாரத்துறை மூலம் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் 70 சதவிகிதம் பேரின் ரத்தத்தில் கொரோனா ஆண்டிபாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்பட தொடங்கியதில் இருந்து அதன் பரவல் குறித்து அறிவதற்காக செரோ சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு பகுதியில் எத்தனை பேரின் ரத்தத்தில் கொரோனா ஆண்டிபாடி இருக்கிறது என்று செய்யும் சோதனை ஆகும் இது.
எத்தனை பேருக்கு கொரோனா வந்துவிட்டு சென்று இருக்கிறது என்று இதன் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். நாடு முழுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாகவும் இந்த சோதனை நடத்தப்படும், மாநில அளவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாகவும் இந்த சோதனை நடத்தப்படும்.

எப்படி சோதனை செய்வார்கள்?
செரோ சோதனையில் ஒரு பகுதியில் குறிப்பிட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்து அவர்களின் உடம்பில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிப்பாடி இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள்.ஒருவரின் உடலில் இருக்கும் IgM அல்லது IgG ஆண்டிபாடி இருப்பதை வைத்து அவர்களுக்கு கொரோனா வந்துவிட்டு போய் இருக்கலாம் என்று உறுதி செய்யப்படும். பொதுவாக ஒருவருக்கு கொரோனா வந்து சென்ற பின் 2 வாரத்தில் IgG ஆண்டிபாடி உருவாகும்.

IgG ஆண்டிபாடி
செரோ சர்வேவில் எவ்வளவு IgG ஆண்டிபாடி இருக்கிறது என்றுதான் கண்டுபிடிக்கப்படும். இதை வைத்துதான் முடிவு இறுதி செய்யப்படும். ரத்தத்தில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருந்தால் அவர்களுக்கு கொரோனா வந்து குணமாகி இருப்பதாக அர்த்தம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில சுகாதாரத்துறை மூலம் நடத்தப்பட்ட செரோ சர்வேயில் 70 சதவிகிதம் பேரின் ரத்தத்தில் ஆண்டிபாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எத்தனை பேர்
இது மாநில அரசு மூலம் நடத்தப்பட்ட சோதனை ஆகும். அதன்படி மொத்தமாக மாநிலம் முழுக்க 827 கொரோனா கிளஸ்டர்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிளஸ்டருக்கு 30 பேரிடம் சோதனை செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ரேண்டம் முறையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக எல்லா கிளஸ்டரும் சேர்த்து 24586 பேரிடம் இந்த சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

கிராமம் நகரம்
கிராமம் நகரம் என்று ரேண்டம் முறையில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில்தான் செரோ சதவிகிதம் 70 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 24586 பேரில் 70 சதவிகிதம் பேருக்கு கொரோனா ஆண்டிபாடி இருந்துள்ளது. அதாவது இவர்களுக்கு கொரோனா வந்து சென்று உள்ளது. தமிழ்நாட்டில் அதிகமாக விருதுநகரில் 84 சதவிகிதம் பேருக்கு ஆண்டிபாடி இருந்துள்ளது.

சோதனை
கடந்த ஏப்ரலில் தமிழ்நாட்டில் இந்த சதவிகிதம் 29 ஆக இருந்தது. தற்போது இது 70 ஆக உயர்ந்துள்ளது. ஜூலை -ஆகஸ்ட் மாதங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை, தென்காசி, மதுரை, தேனி மாவட்டங்களில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமாக செரோ சதவிகிதம் இருந்துள்ளது. கரூரில் குறைவாக 51 சதவிகிதம் மட்டுமே இருந்துள்ளது. பெரம்பலூர், அரியலூர், நீலகிரியில் 50-60க்கு இடையில் செரோ சதவிகிதம் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை
நேற்று மாலை நிலவரப்படி தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 26,74,233 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 16,513 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 26,21,986 பேர் இதில் குணமடைந்து உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 35,734 பேர் பலியாகி உள்ளனர். நேற்று புதிதாக 1,390 பேருக்கு கொரோனா ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications