எடப்பாடி தந்திரம்.. டெல்லியில் செய்த "லாபி".. ஒரே நாளில் ஓபிஎஸ்ஸை அதிர வைத்தது எப்படி? நடந்தது என்ன?
சென்னை: எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் என்று முறையில் தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் தங்களின் இணைய பக்கத்தில் பதிவேற்றியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் எடப்பாடியின் தந்திரமான பிளான் ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் பன்னீர் மற்றும் எடப்பாடி தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட எந்த ஆவணங்களின் மீதும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் தேர்தல் ஆணையர்கள் அமைதியாகவே இருந்து வந்தனர்.
இதை எடப்பாடி கூட உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இடைக்கால நிவாரணம் கோரி இருந்தார். இந்த வழக்கு விசாரணை காரணமாக தேர்தல் ஆணையம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்கவில்லை என்பதால் எடப்பாடி இடைக்கால நிவாரணம் கோரி இருந்தார்.

கோரிக்கை என்ன
அதிமுகவில் விதிகளை மாற்றி, பொதுக்குழுவை கூட்டி, பதவிகளில் மாற்றம் செய்து உள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து உள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையத்தில் இந்த விதி மாற்றங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தேர்தல் விதி மாற்றங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே இந்த வழக்கிற்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து உள்ளார். இந்த வழக்கில் இன்னும் இடைக்கால நிவாரணம் அளிக்கப்படவில்லை.

நிவாரணம்
இப்படிப்பட்ட நிலையில்தான் திடீரென எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த கட்சியின் வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது. கட்சியின் வரவு செலவு கணக்கு என்று எடப்பாடி தாக்கல் செய்த விவரங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது. முறைப்படி இன்னும் எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அதேபோல் பொதுக்குழுவில் செய்யப்பட்ட விதி மாற்றங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அப்படி இருக்கும் போது இப்போதும் அதிமுக பொருளாளர் ஓ பன்னீர்செல்வம்தான். எனவே அவர்தான் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

வரவு செலவு
ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு பதிலாக எடப்பாடி தாக்கல் செய்த வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு தங்கள் இணைய பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. கிட்டத்தட்ட எடப்பாடிக்கு ஆதரவான முடிவாக இது பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் எடுத்த இந்த முடிவை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள். இது உச்ச நீதிமன்றத்திலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. பாருங்கள் தேர்தல் ஆணையமே ஏற்றுக்கொண்டுவிட்டது, எனவே எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைக்க வாய்ப்பு உள்ளது. ஓபிஎஸ்சுக்கு இது பின்னடைவாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தின் பின்னணியில் எடப்பாடியின் தந்திரம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் அதிமுகவினர்.

தந்திரம்
இத்தனை நாட்கள் எடப்பாடிக்கு எதிராக நீதிமன்றம் மூலமாக எதிர் அரசியலை மட்டுமே செய்து வந்த ஓபிஎஸ், திடீரென பொதுவெளியில் அரசியல் செய்ய தீர்மானித்துள்ளார். அதன் ஒரு கட்டம்தான் அதிமுகவின் மா.செ.க்களாக, நிர்வாகிகளாக தன்னால் நியமிக்கப்பட்டவர்களை வைத்து ஆலோசனைக் கூட்டத்தை 21-ந்தேதி ஓபிஎஸ் நடத்தியது. இதன் மூலம் எடப்பாடிக்கு செக் வைக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்சின் நோக்கம். இதற்கு பாஜக மேலிடத்தின் ஆதரவும் அட்வைசும் இருந்தன. மா.செ.க்கள் கூட்டத்தை ஓபிஎஸ் கூட்டுகிறார் என்கிற அறிவிப்பே எடப்பாடிக்கு சற்று எரிச்சலை தந்தபடி இருந்தது. என்ன செய்யலாம் என யோசித்த போதுதான், அந்த தந்திரத்தை கையாளுவது என எடப்பாடி தீர்மானித்திருக்கிறார்.

எடப்பாடி திட்டம்
அதாவது, ஓபிஎஸ் மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டும் அதே நாளில், அந்த செய்தியின் பரபரப்பை குறைக்கும் வகையிலும், ஓபிஎஸ்சுக்கு செக் வைக்கும் வகையிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் தன் பக்கம் திருப்பி பார்க்க வேண்டும் என்ற வகையிலும் ஒரு காரியம் செய்ய வேண்டும் என யோசித்த அவர், தேர்தல் ஆணையம் மூலம் ஒரு தகவல் பரவினால்தான் நாம் நினைத்து நடக்கும் என்று முடிவு செய்திருக்கிறார். அதற்கு அவர் எடுத்ததுதான் வரவு செலவு கணக்கு அறிக்கையை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதை வெளிப்படுத்த வேண்டும் என்பது! இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை அக்டோபர் 3-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புகைதான் (அக்கனாலெட்ஜ்மெண்ட்) அது.

அக்கனாலெட்ஜ்மெண்ட்
அதனை எடப்பாடி தரப்பிலிருந்து வெளியிட்டால், தான் நினைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தாது என நினைத்த எடப்பாடி, தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் அந்த ஒப்புகை சீட்டை பதிவேற்றம் செய்தால் தான், எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமே அங்கீகரித்து விட்டதாக செய்தி பரவும் என முடிவு செய்திருக்கிறார். சி.வி.சண்முகத்திடமும் ஜெயக்குமாரிடமும் இது குறித்து அவர் விவாதிக்க, அவர்களும், இது சூப்பரானா மூவ் என சொல்ல, டெல்லியில் உள்ள தங்களது லாபியஸ்டுகள் மூலம் தேர்தல் ஆணைய தரப்பை அணுகியுள்ளனர்.

லாபி
அவர்களும் ஒப்புக்கொள்ள இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தனர். அதுவும் ஓபிஎஸ் மா.செ.க்கள் கூட்டம் நடக்கும் நாளில் இதனை பதிவேற்றம் செய்ய வைத்திருக்கிறார் எடப்பாடி. பதிவேற்றம் செய்ததும் அதனை எடப்பாடி தரப்பே பரப்பியது. அவர் எதிர்பார்த்தது போலவே, ஓபிஎஸ் கூட்ட பரபரப்பை இந்த விசயம் பின்னுக்கு தள்ளியதுடன் ஓபிஎஸ்சுக்கு செக் வைப்பது போலவும் நடந்தது . எடப்பாடியின் தந்திரம் வென்றுள்ளது என்று விவரிக்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications