முதல்வராகி மூன்று நாட்களில் அடுத்தடுத்து பின்னடைவு.. படாத பாடு படும் முதல்வர் விஜய்!
சென்னை: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற 3 நாட்களில் அவரது அரசு, 3 முக்கிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது. பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது சர்ச்சைக்குள்ளான நிலையில் பின்னர் இவ்வாறு நடக்காது என தவெக பேக் அடித்தது.
போலி செய்திகளை பரப்புவதாக கூறி எக்ஸ் பதிவுகளை முடக்கியதற்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்தது இரண்டாவது பின்னடைவையும், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டிற்கு அரசு பதவி வழங்கப்பட்டு பின்னர் எதிர்ப்புகள் கிளம்பியதால் இதனை வாபஸ் பெற்றது என அடுத்தடுத்து 3 பின்னடைவுகளை சந்தித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை
தமிழக வெற்றிக் கழகம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியாமல் விஜய் தவித்து வந்தார். ஆரம்பத்திலேயே விஜய் ஆட்சி அமைக்க முடியாமல் தினமும் ஆளுநர் அர்லேகரை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதன்பிறகு விஜய் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, ஐயூஎம்.எல் ஆதரவை பெற்ற நிலையில் 4வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கோரியிருந்தார்.
இதற்கு பிறகே விஜய்க்கு ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக முதல்வராக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அன்றைய பதவியேற்பு விழாவில் இரண்டு முறை வந்தே மாதரம் பாடல் போடப்பட்டது மட்டும் இன்றி, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது. விஜய் பதவியேற்ற உடனேயே இந்த தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் விஜய் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்டுகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளே கண்டனம் தெரிவித்தன. இதனால் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இந்த பிரச்சனை தவெகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. உடனே இதற்கு விளக்கம் அளித்த தவெக, இனி இது போன்று நடக்காது எனவும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்றும் உறுதி அளித்தது.
எக்ஸ் பதிவு முடக்கம்
விஜய் முதல்வராக பதவியேற்ற முதல் நாள் இப்படி கடந்த நிலையில், இரண்டாம் நாளில் எக்ஸ் தள பக்கத்தில் போலி செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வந்த நிலையில் அந்த பதிவுகளை முடக்கி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து எக்ஸ் பதிவுகளை முடக்கியதற்கு ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இது விஜய்யின் தவெகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஜோதிடர் நியமனம்
மூன்றாவதாக நேற்று தமிழக முதல்வர் விஜய்யின் சிறப்புப் பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இவர் பிரபல ஜோதிடராகும். மேலும் த.வெ.க. கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் நேற்று வெளியிட்டார்.
தனது ஆஸ்தான ஜோதிடராக இருக்க கூடிய ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேலுக்கு தமிழக அரசில் பணி வழங்கப்பட்டு இருப்பது கடும் விமரசனங்களை ஏற்படுத்தியது. தவெகவிற்கு ஆதரவு அளிக்கக் கூடிய கட்சிகளான இடதுசாரிகள், விசிக கடுமையாக விமர்சித்தன. தேமுதிக பிரேமலதாவும் கடுமையாக விமர்சித்து இருந்தார். விஜய் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசியல் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பை பதிவிட்டு வந்தன.
இந்த நிலையில் விஜய்யின் சிறப்புப் பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் அதிகம் கிளம்பிய நிலையில் விஜய் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. பதவியேற்ற 3 நாட்களில் விஜய் அரசு 3 முக்கிய பின்னடைவை சந்தித்து இருக்கிறது தவெக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications