ஏழு தமிழர் விடுதலை விவகாரம் காங்கிரஸ் சொல்வதை ஏற்க முடியாது - திமுகவின் ஆர்.எஸ் பாரதி
ஏழு தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று திமுகவின் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் அமைப்புச்செயலாளரும் எம்.பியுமான ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது கொள்கை வேறு கூட்டணி வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆளுநர் இதுவரை எந்த பதிலையும் கொடுக்கவில்லை. அதனால் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக அரசியல் கட்சியினர் கோரிக்கை வைக்கக்கூடாது என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்துத் தமிழ் கொலைக் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.
7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலைக்குற்றம் செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல என்றும் கே.எஸ் அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏழுபேர் விடுதலை குறித்து திமுக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் கூட்டணி கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கிறது. இதனால் கூட்டணியில் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. கே.எஸ் அழகிரியின் அறிக்கை பற்றி கருத்து கூறியுள்ள திமுக எம்.பி ஆர். எஸ் பாரதி, ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்.
காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூட்டணி வேறு, கொள்கை வேறு என்றும் ஆர்.எஸ் பாரதி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications