தமிழக சட்டமன்றத்தில் செங்கோல்.. 2026ல் இதுதான் நடக்கப்போகுது! அடிச்சு சொல்லும் மத்திய அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சியமைக்கும் என்றும், அப்போது சட்டமன்றத்தில் 'செங்கோல்' வைக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டபோது மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்பட்டது. அப்போதிலிருந்து செங்கோல் தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 27ம் தேதி 18வது மக்களவையின் கூட்டம் தொடங்கியது. அப்போது இந்த செங்கோல் குறித்த சர்ச்சை மீண்டும் வெடித்தது. சமாஜ்வாடி கட்சியின் எம்பி ஆர்.கே.சவுத்ரி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒவ்வொருவராக செங்கோல் குறித்து கேள்வி எழுப்பி, அதனை மக்களவையிலிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இப்படி இருக்கையில்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசனின் கருத்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
"மீண்டும் செங்கோலோடு எங்களது பிரதமர் மோடி நாடாளுமன்ற அவைக்குள் நுழைந்திருக்கிறார் என்று அமைச்சர்கள் பெருமையோடு பேசியிருக்கிறார்கள். செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் இதையெல்லாம் தகர்த்துவிட்டுத்தான் இந்திய ஜனநாயகம் இந்த அவையில் கால் ஊன்றியது. மன்னராட்சி எப்பொழுது ஒழிந்ததோ அப்பொழுதே செங்கோலின் மகிமையும் ஒழிந்துவிட்டது.
செத்துப்போன சிங்கத்தின் தோலை போர்த்திக் கொண்டு காட்டுக்கு ராஜா நான் தான் என்று நீங்கள் கதையடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்த செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனை பெண்களை அடிமையாக வைத்திருந்தான் என்று?
இந்த செங்கோலை கொண்டு வந்து இந்த இடத்திலே வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? வேதனையாக இருக்கிறது. இந்த இடத்திலே நாங்கள் மீண்டும் பதிவு செய்ய விரும்புகின்றோம். நாடாளுமன்றத்தினுடைய நுழைவு வாசலில் தேசத்தந்தை காந்தியின் சிலை இருந்தது. நாடாளுமன்றத்தின் முன்புறம் அண்ணல் அம்பேத்கரின் சிலை இருந்தது. இன்றைக்கு அவைகளெல்லம் காணவில்லை. நாடாளுமன்றத்தின் பின்புற வாசலிலே வைத்திருக்கிறீர்கள். ஆனால் சாணக்கியரையும், சாவர்க்கரையும் செங்கோலையும் நாடாளுமன்றத்திற்குள்ளே வைத்திருக்கிறீர்கள்.
செங்கோல் இரண்டு செய்தியின் குறியீடு., ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது குறியீடு அறம், நேர்மையின் குறியீடு. உங்களுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?" என்று மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது ஆளும் கட்சி தலைவர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செங்கோல் என்பது பெண்களை அடிமைபடுத்துவது போன்றது என கூறிய மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வில் அதை பிடித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். மக்களவையில் பிரதமர் செங்கோல் வைத்தால் தவறு. இவர்கள் செய்தால் சரி. இதுதான் இவர்களின் அரசியல் போலி முகத்திரை" என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பான விவாதங்கள் நீண்டுக்கொண்டிருக்கையில், தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் செங்கோலை வைப்போம் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறியிருப்பது இந்த விவாதங்களை மேலும் கூர்மையடைய செய்திருக்கிறது.
அதாவது சென்னையில் இன்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவராஜ் சிங், "தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு பாஜக ஆட்சி அமையும்போது, சட்டமன்றத்தில் 'செங்கோல்' வைக்கப்படும். திமுக ஆட்சியின் குறைகளை மறைக்க மத்திய அரசு மீது முதலமைச்சர் ஸ்டாலின் குறை சொல்கிறார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications