தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - என்ன சொல்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 8.8 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசிகள் குறைவான அளவிலேயே கையிருப்பில் உள்ளதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 8.8 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 3600 அரசு முகாம்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், விடுபட்ட முன்கள பணியாளர்களுக்கும் ஊசி போடப்படுகிறது. அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு ஊசி போடப்படுகிறது.
தடுப்பூசி திருவிழாவில் அதிகபட்சமாக கடந்த 16 ஆம் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்துக்கு இதுவரை 47 லட்சத்து 3 ஆயிரம் கோவிஷீல்டு, 7 லட்சத்து 82 ஆயிரம் கோவாக்ஸின் என மொத்தம் 54 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
தற்போது 5 லட்சத்திற்கும் குறைவான பாட்டில் தடுப்பூசிகளே இருப்பு இருப்பதாகவும் அடுத்த 3 நாட்களில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் குறைவான தடுப்பூசிகளே ஒதுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.
சென்னையில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. ஆரம்பத்தில் 10 பேர் முதல் 100 பேர் வரை மட்டுமே வந்தார்கள். இப்போது கொரோனா 2வது அலை தீவிரமாகி இருப்பதால் மக்களிடம் தடுப்பூசி போட ஆர்வம் அதிகரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரத்தில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவேக்சின் ஊசி கையிருப்பு இல்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அதிகமானோர் கூடி இருந்தனர். ஆனால் கொரோனா தடுப்பூசிகளான கோவேக்சின், கோவிஷீல்டு இரண்டுமே கையிருப்பு இல்லை என்று டாக்டர்கள் கூறியதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் புறநகர் பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா ஊசி போடுவதற்காக வருகிறார்கள். அவர்களில் 200 பேருக்கு மட்டுமே ஊசி போடப்பட்டு வருகிறது. மீதி 100 பேர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
நீலகிரியில் கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 36 இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 83 ஆயிரத்து 186 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே மதுரை மருத்துவக்கல்லூரி மற்றும் மாவட்ட அரசு மற்றும் சுகாதார மையங்களில் 980 தடுப்பூசிகள் மட்டும் இருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சேலம் மாவட்டத்தில் 285 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. தற்போது மாவட்டத்தில் பரவலாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பல பகுதிகளில் ஆதார் அட்டையுடன் தடுப்பூசி போட வரும் மக்கள் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது. சேலம் அரசு ஆஸ்பத்திரி தவிர மற்ற இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தாராளமாக போடப்படுகிறது. அதற்கான உரிய பணம் கொடுத்து சிலர் தடுப்பூசி போடுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா காரணமாக அவினாசி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினர்.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முதலில் கோவிஷீல்டு தடுப்பூசியை அதிகம் பேர் விரும்பி போட்டு வந்தனர். ஆனால் தற்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. நெல்லை பல்நோக்கு மருத்துவமனையில் மட்டும் கோவேக்சின் தடுப்பூசி சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி 11 ஆயிரம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் முன்கள பணியாளர்களுக்கு போடுவதற்கே கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போட வரும் பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மாவட்டத்தில் இதுவரை 46 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் மொத்தம் 20 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தட்டுப்பாடு காரணமாக பல மையங்களில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
We received 55.85 lakh doses of #Covidvaccine (covishield & covaxin) as of 17 April from Union Govt. We have completed 47.05 lakh doses and have stocked up ~ 8.8 lakh doses for vaccination. Pls, do not pay heed to rumours about the safety of vaccines, but do get vaccinated. pic.twitter.com/W5WCpXI1qA
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 18, 2021
குமரி மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியாற்றியவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தடுப்பூசி போட முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல மையங்களில் முதல் தவணை கோவாக்ஸின் போட்டவர்கள் 28 நாட்கள் நிறைவடைந்தும், 2ஆம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசிடம் கூடுதலாக 10 லட்சம் கோவிசீல்டு மற்றும் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை உடனே ஒதுக்குமாறு தமிழக அரசு கேட்டுள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி வரை மத்திய அரசிடம் இருந்து 55.85 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
47.05 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் 8.8 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் குறித்த எந்த வதந்திக்கும் செவி மடுக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தினசரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு உடனடியாக தேவையான தடுப்பூசிகளை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.