ஆதாரத்தை காட்டுங்க! ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி! ஆர்.என் ரவிக்கு கனிமொழி பளீர் கேள்வி
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதை மூடி இருப்பதாக தெரிவித்த ஆளுநர் ஆர். என் ரவிக்கு திமுக தூத்துக்குடி எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். இந்த சம்பவத்தில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர்.
போராட்டம் செய்து கொண்டு இருந்த மக்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான தாக்குதலில் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு உலக அளவில் கவனம் பெற்றது. இந்த துப்பாக்கி சூடு சட்ட விரோதமாக நடைபெற்றதாக கடுமையாக புகார்கள் வைக்கப்பட்டன. அப்பாவி மக்களை போலீசார் சுட்டதாக புகார் வைக்கப்பட்டது. ஆனால் போலீசார் தரப்போ, போராட்டக்காரர்கள் கலவரம் செய்த காரணத்தால்தான் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறினர்.

அதோடு கலவரத்தில் சில விஷமிகள், சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்றும் போலீசாரும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் ஆணையம் கூட, போராடி மக்கள் மீது தவறு இல்லை. போலீசார் மீதுதான் தவறு என்று அறிக்கை அளித்தது. குறிப்பிடத்தக்க வகையில் காவல் துறையினருக்கும் உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடிய கொடுமையான காயங்களோ அல்லது கொடுங்காயங்களோ ஏற்படவில்லை. காட்டில் விலங்குகளை சுடுவது போல சுடலை என்ற போலீஸ் மக்கள் மீது கொடூரமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளார் என்று இந்த அறிக்கையில் கூட கூறப்பட்டது.
அப்போதே ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக, வெளிநாட்டு பணத்தில் போராட்டம் நடத்தப்பட்டதாக சிலர் கூறி இருந்தனர். ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் எதுவும் அவர்களால் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதை மூடி இருப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார்.

இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படி குறிப்பிட்டு உள்ளார். அவர் தனது பேச்சில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதை மூடி உள்ளனர். நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்தது ஸ்டெர்லைட் ஆலை. இப்படிப்பட்ட பெரிய ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். வெளிநாடுகளில் இருந்துவரும் நிதிகள் பலவும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன, என்று ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு திமுக தூத்துக்குடி எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன். தன்னுடைய ஆதாரங்களைத் தரவேண்டும் ஆளுநர்பேச்சுக்கு , என்று கனிமொழி விமர்சனங்களை வைத்துள்ளார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பலரும் கடுமையான கண்டனங்களை வைத்து வருகின்றனர்.
விசிக எம்பி ரவிக்குமார் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், வேதாந்தா நிறுவனத்தின் தூண்டுதலால் இதைப் பேசுகிறாரா? அந்த போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உயிர்த் தியாகத்தை கொச்சைப்படுத்தியதற்காக ஆளுநர் வருத்தம் தெரிவிக்கவேண்டும், என்று குறிப்பிட்டு உள்ளார். அதேபோல் விசிக தலைவர் எம்பி திருமாவளவன் வெளியிட்டுள்ள கண்டனத்தில், ஆளுநருக்கு இப்படி எல்லாம் பேச அதிகாரம் இல்லை. ஆளுநர் ஒரு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். ஒரு நிறுவனத்திற்காக அவர் பேசி வருகிறார், என்று கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications