“நீ இறந்துவிட்டதாக சொல்கிறார்கள்..” ரத்தன் டாடா மறைவால் கலங்கிய முன்னாள் காதலி சிமி கேரேவால்!
சென்னை: இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தார் ரத்தன் டாடா. 1970, 80களில் பாலிவுட்டை கலக்கிய நடிகை சிமி கேரேவாலும் ரத்தன் டாடாவும் காதலித்து வந்தனர், ஆனால் இவர்களின் காதல் திருமணத்தில் கைகூடவில்லை. இந்நிலையில், ரத்தன் டாடா மறைவுக்கு, சிமி கேரேவால் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
86 வயதில் காலமான இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ரத்தன் டாடா அமெரிக்காவில் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து இருந்தார். அப்போது அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால், சூழல் காரணமாக அவர்கள் காதல் திருமணமாக கைகூடவில்லை.

இதுபற்றி ரத்தன் டாடா முன்பு ஒரு நேர்காணலில் கூறுகையில், "அமெரிக்காவில் வேலை செய்த போது ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். கிட்டத்தட்ட திருமணம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டேன். ஆனால் அப்போது திடீரென எனது பாட்டியின் உடல்நிலை மோசமானது. அதனால் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டியதாகிவிட்டது. எனது காதலியும் இந்தியாவுக்கு வந்துவிடுவார் என்றே நம்பினேன். ஆனால், அப்போது தான் 1962 இந்தியா - சீனா போர் வெடித்து இருந்தது. இதனால் அவரது பெற்றோர் அவரை இந்தியா அனுப்பச் சம்மதிக்கவில்லை. இதனால் அந்த உறவு அப்படியே முறிந்து போனது" என்று கூறி இருந்தார்.
அதுமட்டுமின்றி தான் 4 முறை அவர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, 4 முறையும் அது தள்ளிப்போனதாகவும் ரத்தன் டாடா கூறியுள்ளார். அதில், பாலிவுட் நடிகை சிமி கேரேவால் உடனான காதல் உறவும் ஒன்று. 1970, மற்றும் 1980களில் பாலிவுட்டில் கலக்கிய நடிகையும், தொலைக்காட்சி பிரபலமுமான சிமி கரேவால் ரத்தன் டாடா காதலித்து வந்தார். அவர்கள் சீரியஸாக காதலித்து வருவதாகவும் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே அப்போது பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், சில காரணங்களால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

பின்னர், சிமி கேரேவால் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்தார். தங்களுக்கு இடையேயான காதல் பற்றி இருவருமே சில தருணங்களில் மேலோட்டமாக வெளிப்படுத்தி உள்ளனர். சிமி கேரேவால் நடத்திய டிவி நிகழ்ச்சி நேர்காணலில் பங்கேற்றுள்ளார் ரத்தன் டாடா.
ஒருமுறை சிமி கேரேவால் பேட்டி ஒன்றில் பேசுகையில், "ரத்தன் டாடா சரியானவர், சிறந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். அடக்கமானவர், உண்மையான மனிதர்! பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே ஒருபோதும் அவரது முக்கிய உந்துதலாக இருக்கவில்லை. அவர் வெளிநாட்டில் இருந்தது போல் இந்தியாவில் நிம்மதியாக இல்லை" எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் ரத்தன் டாடா மறைவால் கலங்கிப்போய் உருக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் சிமி கேரேவால். "நீ போய்விட்டாய் என்று சொல்கிறார்கள். உன் இழப்பைத் தாங்குவது மிகவும் கடினம்.. மிகவும் கடினம்.. பிரியாவிடை நண்பா" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications