இலங்கையிலிருந்து..இதயத்தின் ஆழத்திலிருந்து..! முதல்வருக்கும் தமிழர்களுக்கும் நன்றி! உருகிய சிங்களர்!
சென்னை : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்வதாக இலங்கையைச் சேர்ந்த சிங்களர் ஒருவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அண்டை நாடான இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்தார்.
இந்த நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி, 200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும் 24 மெட்ரிக் டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மே 18 இலங்கை நாட்டிற்கு சரக்குக் கப்பலில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இலங்கை நெருக்கடி
இலங்கை நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ, 40 ஆயிரம் டன் அரிசி, உயிர் காக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசிடமும் அனுமதி கோரி தீர்மானம் அளிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசும் அனுமதி அளித்தது.

மக்களுக்கு உதவி
இதனையடுத்து இலங்கை வாழ் மக்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசியப் பொருட்களான அரிசி, ஆவின் பால் பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை TAN BINH 99 என்ற சரக்குக் கப்பலில் அனுப்பி வைக்கும் நிகழ்வினை தமிழக முதல்வர் சென்னை துறைமுகத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதே போல இரண்டாம் கட்டமாக தூத்துக்குடி வ உ சி துறைமுகத்திலிருந்து 67 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களும் கடந்த 23ஆம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடியில் இருந்து மூன்றாம் கட்டமாக vtc சன் என்ற கப்பலை 54 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் மதிப்புள்ளான நிவாரண பொருட்கள் இதுவரை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

முதல்வருக்கு நன்றி
இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவியதற்கு தமிழக மக்களுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இலங்கையிலிருந்து சிங்களவர் ஒருவர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.. அந்த கடிதத்தில் நான் சபரகமுவா மாகாணத்தின் கேகாலை சேந்த சிங்களர். என் வயது 63. நான் புத்த மதத்தை பின்பற்றுபவன். இந்த கடினமான சூழ்நிலையில் தாங்கள் அரிசி வழங்கியத்திற்கு உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி.

சிங்களர் கடிதம்
இதய நோயாளிகளான நானும், என் துணைவியும் 10 கிலோ அரிசி பையை பெற்றுக்கொண்டோம். நாட்டில் நிலவும் சூழலால் அன்றாட வருமானத்தை இழந்துள்ளோம். இதயத்தின் அடி மனதில் இருந்து உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களும் மிக்க நன்றி. இலங்கை வாழ் மக்கள் மீதான இரக்கத்திற்கு மிகுந்த நன்றி. அன்புடன், விஜிதா விக்கிரமசிரி" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications