சிறை திரைப்படம்.. உண்மையான காதலர்கள் என்ன ஆனார்கள்? இயக்குநர் சொன்ன விஷயம்!
சென்னை: இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் 'சிறை'. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் திரைப்படம் வெற்றிப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரம் உண்மை மனிதர்களை அடிப்படையாக கொண்டது என்று, படத்தின் கதாசிரியர் இயக்குநர் தமிழ் கூறியுள்ளார்.
சினிமாவில் அத்திப் பூ பூப்பதை போல சில தரமான திரைப்படங்கள் சில நேரங்களில் வெளியாகிறது. அப்படி வந்த படம்தான் 'சிறை'. ஏற்கெனவே விக்ரம் பிரபுவுக்கு போலீசாக நடித்த அனுபவம் இருக்கிறது என்பதால், இந்த திரைப்படத்திலும் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அவரது நடிப்பையும் கடந்தது.. படத்தில் கவனிக்கப்பட்ட காபாத்திரம் அக்ஷய் குமார் மற்றும் அனிஷ்காவின் கதாபாத்திரங்கள்தான். படத்தில் இவர்கள் காதலர்களாக நடித்திருப்பார்கள். இந்த கதாபாத்திரம் குறித்து பேசிய படத்தின் கதாசிரியரும், பிரபல இயக்குநருமான தமிழ், உண்மையான மனிதர்களின் கதையை வைத்துதான் இந்த கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நான் வேலூர் சிறைச்சாலையில் கைதிகளை, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு காவலராக இருந்தேன். இவர்களை போன்ற காதலர்களை அப்போதுதான் பார்த்தேன். நான் அழைத்துச் சென்ற சிறை கைதிக்கு காதலி இருந்தார். அந்த கைதி இந்து, நீதிமன்றத்தில் அந்த பையனை காண காதலி எப்போதும் வருவார். 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் இப்படி சந்தித்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
எப்படியாவது அவர்களை நீதிபதியிடம் பேச வைத்துவிட வேண்டும் என முயன்றேன். ஆனால், அதற்குள் எனக்கு பணியிட மாறுதல் கிடைத்துவிட்டது. என் நண்பரிடம் அந்த பையன் குறித்து சொல்லிவிட்டு வந்தேன். ஆனால், பணி அழுத்தம் காரணமாக அந்த காதலர்களை மறந்துவிட்டேன். உண்மையான காதலர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
அந்த காதலர்களின் நிலை என்ன ஆனது? அண்டார்டிக் பகுதியில், ஒற்றையில் தனிமையாக நடந்து சென்ற பென்குயின் போல.. காதலர்களின் வாழ்க்கையும் பதில் இல்லாமல் போய்விட்டதா? அல்லது சேர்ந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்களா? என்பதற்கான விடை இப்போது வரை தெரியவேயில்லை.












Click it and Unblock the Notifications