7 பேரை ராகுல் மன்னிக்கலாம்; சட்டம் மன்னிக்காது - கார்த்தி சிதம்பரம்
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை எனக் கூறுகிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;
"ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கும் எந்த சலுகையும் வழங்கக் கூடாது. ராகுல் காந்தி இவர்களை மன்னிக்கிறார் என்றால் அது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால் அதற்காக 7 பேரை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் இருப்பது இந்தியா, அரபு நாடுகள் அல்ல. சவூதியில் தான் கொலைசெய்யப்பட்டவர் குடும்பத்தினர் மன்னித்தால் கொலை செய்தவர் விடுவிக்கப்படுவார். அது போன்ற ஒரு சட்டம் இங்கு இல்லை."
கொரோனா நோயாளிகள் பற்றாக்குறைன்னு விளம்பரம் கொடுங்க-மத்திய பாஜக அரசை விடாமல் வறுக்கும் ப. சிதம்பரம்
மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் குறித்து பேசிய அவர், "திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதால் அந்தக் கட்சி எடுக்கும் எல்லா முடிவுகளுடனும் ஒத்துப் போக தேவையில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை, கருத்துக்கள் இருக்கலாம். அதனால் இந்த விவகாரத்தில் ஒன்றுடன் ஒன்றை பொருத்தி பார்க்க அவசியமில்லை" எனக் கூறினார்.
"இதனிடையே கொரோனா தடுப்பு பணிகளில் அரசு நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. குறை சொல்வதற்கு எதுவுமில்லை. ஆட்சிக்கு வந்து 20 நாட்களில் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி குறித்து கிராமப்புறங்களில் மூட நம்பிக்கை பரவலாக உள்ளது. ஆகையால் இது குறித்த விழிப்புணர்வை அரசு இன்னும் அதிகமாக ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்த பேட்டியின் வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன்."