தமிழ்நாட்டில் முதல்முறை.. அரிவாள் செய்து கொடுத்த.. பட்டறை உரிமையாளர் ஆயுத தடுப்பு சட்டத்தில் கைது!
சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக அரிவாள் தயாரித்துக் கொடுத்த பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சமீப காலமாகவே குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாடி வருகின்றனர். இருப்பினும், இதை அரசு தொடர்ந்து மறுத்தே வருகிறது.
மேலும், தமிழ்நாடு போலீசாரும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆடி பவுர்ணமி..அரிவாள் மீது ஏறி நின்று குறி சொன்ன பூசாரி..பூக்குழி இறங்கிய பக்தர்கள்
சிவகங்கை
இந்தச் சூழலில் சிவகங்கையில் அரங்கேறியுள்ள சம்பவம் பேசுபொருள் ஆகி உள்ளது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அரிவாள் செய்ய மிகவும் புகழ்பெற்ற பகுதிகளாகும். இங்கு பல்வேறு பகுதிகளிலும் ஏகப்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இதற்குப் பெரிதாக எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமலேயே இருந்தது. இதனால் அங்குக் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கும் அரிவாள்கள் எளிதாகக் கிடைக்கும் சூழல் உருவானது.
குற்றச்சாட்டு
குறிப்பாக ரவுடிகள், குற்றவாளிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் எளிதாகக் கிடைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இதை தடுக்க கடந்த ஆண்டு போலீசார் அரிவாள் பட்டறைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளைப் போட்டனர். குறிப்பாக அரிவாள் பட்டறைகளில் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தினர். மேலும், அரிவாள் வாங்க வருவோர் ஆதார் கார்டு நகல் கொடுத்தால் மட்டுமே அரிவாள் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
கைது
இந்தச் சூழலில் நேற்று சிவகங்கை கண்டாங்கிப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த 5 குற்றவாளிகளைச் சிவகங்கை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது. அவர்கள் திண்டுக்கல்லைச் சேர்ந்த சோனைமுத்து (25), சிவகங்கையைச் சேர்ந்த சம்சுதீன் (20), சபரிவேலன் (19), விக்னேஸ்வர் (21), ராஜ்குமார் (24) என அடையாளம் காணப்பட்டது.
விசாரணை
மேலும், அவர்களுக்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தது என விசாரணை செய்தனர். அதில் காளையார்கோவில் அருகேயுள்ள பள்ளித்தம்பத்தை பகுதியில் இருக்கும் பட்டறையில் இருந்து ஆயுதங்களை அவர்கள் பெற்றது தெரிய வந்தது.
முதல்முறை
போலீசாரின் எச்சரிக்கையை மீறி ரவுடிகளுக்கு ஆயுதத்தைக் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக பள்ளித்தம்பத்தைச் சேர்ந்த பட்டறை உரிமையாளர் ராஜேஷ் (36) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் உத்தரவைக் கண்டுகொள்ளாமல் அரிவாளைச் செய்து கொடுத்த பட்டறை உரிமையாளரை ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் அரிவாள் செய்து கொடுத்தற்காக ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.