சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர்.. அவரை பார்ப்பதற்காக கைக்குழந்தையுடன் காத்திருந்த பக்தர்கள்!
சென்னை: பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். அவரை பார்ப்பதற்காக பக்தர்கள் கை குழந்தையுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான சாமியார் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி போக்சோ வழக்கில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிவசங்கர் பாபா
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முதலில் தமிழ்நாடு போலீஸ் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதிரடி கைது
போலீசார் தேடுவதை அறிந்ததும் சிவசங்கர் பாபா தலைமறைவானர் . இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் ஜூன் 16 ஆம் தேதி டெல்லியில் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல் இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்களான தீபா உட்பட 4 ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்
சிவசங்கர் பாபா தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

காவல் நீட்டிப்பு
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை இன்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை விசாரிக்க காவல்நீட்டிப்பு கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ரீணா வரும் 22-ம் தேதி வரை சிவசங்கர்பாபாவுக்கு காவல்நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டார்.

குழந்தையுடன் காத்திருந்தனர்
காவல் முடிந்ததும் மீண்டும் அவரை நேரில் ஆஜர்படுத்தும்படி கூறினார். முன்னதாக சிவசங்கர் பாபாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை காண அவரது ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்கள் கை குழந்தையுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் சிவசங்கர் பாபாவை பார்த்துவிட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications