மக்களை குஷிப்படுத்திய திடீர் மழை... அடுத்த சில மணி நேரத்திற்கு.. இந்த 4 மாவட்டங்களில் இடியுடன் மழை
சென்னை: இன்று காலை முதலே தலைநகர் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை என மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மிக மோசமாகவே இருந்து வந்தது. சென்னை, திருச்சி, சேலம் என மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சதமடித்தது. இதன் காரணமாகப் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் மக்களை குஷிப்படுத்தும் வகையில் இன்று காலை முதலே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கோயம்பேடு, அண்ணா நகர், வளசரவாக்கம், ராமாபுரம், கே கே நகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருச்சி மாநகர் பகுதிகளிலும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்டோன்மன்ட், பொன்மலைப்பட்டி, எடமலைப்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், ஆலங்குடி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குக் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் வரும் காலங்களில் மாநிலத்தில் பல பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.