"ஹோப்" தந்த ஸ்டாலின் அரசு.. திமிறிய கட்சிகளை ஆஃப் செய்து ஆக்ஷன்.. 262 பேரை தூக்கிய போலீஸ்.. வாவ்
நியாயவிலை கடை பொருட்களை கடத்தி செல்லும் நபர்களை தமிழக அரசு கைது செய்துள்ளது
சென்னை: ரேஷன் அரிசி கடத்தல் மிகப்பெரிய பிரச்சனையாக, திமுக அரசுக்கு ஏற்பட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதை வைத்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது அதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..
புண்படுத்திட்டே இருக்கீங்க! கருப்பு சட்டையோடு வந்த எடப்பாடி & கோ! எதிர்கட்சி து.தலைவர் விவகாரம் தான்
ரேஷன் கடைகள்
மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகளில் நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப உத்தரவுகளும், மாற்றங்களும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. எனினும், ரேஷன் அரிசி கடத்தல் செய்திகள் தலைதூக்கின..
சந்திரபாபு நாயுடு
கடந்த மே மாத இறுதியில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், "தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு தொடர்ந்து அரிசி கடத்தப்படுகிறது. 7 வழித்தடங்கள் வழியாக, கார், பைக், லாரிகள் மூலம் அரிசியை கடத்துகிறார்கள். அந்த அரிசி ஆந்திராவிலுள்ள ஆலைகளில் பாலிஷ் செய்யப்பட்டு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. எனது சொந்தத் தொகுதியான குப்பம் தொகுதியில், கடந்த 16 மாதங்களில் 13 அரிசிக் கடத்தல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
விஜயகாந்த்
சந்திரபாபு நாயுடுவின் அந்தக் கடிதம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. கடந்த அதிமுக ஆட்சியிலும் ரேஷன் கடத்தல் நடந்து கொண்டிருநத்து என்றாலும், திமுக ஆட்சிக்கு வந்த ஒருவருடத்திலேயே ஏராளமான கடத்தல்கள் அதிகரித்து, சர்ச்சையை தந்தது.. ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை சொல்வது, இந்த அரசின் நிர்வாகச் சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது என்று விஷயத்தை கிண்டினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.. விஜயகாந்த், அமமுக டிடிவி தினகரன், பாமக டாக்டர் ராமதாஸ் உட்பட இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்குபிறகு, தமிழக அரசு சாட்டையை சுழட்டியது.
ரேஷன் பொருள்
ரேஷன் அரிசியை சட்ட விரோதமாகக் கடத்துபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையும் எச்சரிக்கை விடுத்தது. தனி டீம் இதற்காகவே நியமிக்கப்பட்டு, ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிரம் காட்டப்படுவதாக கூட்டுறவுத்துறையும் நம்பிக்கை தெரிவித்து வந்தது.. இந்நிலையிட்ல, தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் கடந்த கடந்த சில தினங்களில் ரேஷன் பொருட்களை கடத்திய 262 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திடீர் அறிக்கை
அந்த செய்தி குறிப்பில், அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளச்சந்தை
அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் படி வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980ன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதான் லிஸ்ட்
அதன்படி, 26.12.2022 முதல் 1.1.2023 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ, 7,39,645/- (ஏழு லட்சத்து முப்பத்து ஒன்பதாயிரத்து அறுநூற்று நாற்பத்து ஐந்து ரூபாய் மட்டும்) மதிப்புள்ள 1144 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 2104 லிட்டர், 68 எரிவாயு உருளை ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 36 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட குற்றச் செயலில் ஈடுபட்ட 262 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.