ஜெயிலர் ஒரு படமா? தங்க பதக்கத்துக்கு பக்கத்துல வருமா? கொண்டாடலாமா? சீறிய பெண்ணியவாதி ஓவியா
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை கூட கொண்டாடுவதைப் பார்த்தால் பெரும் அச்சமாக இருக்கிறது என எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ஓவியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஓவியா எழுதி இருப்பதாவது:
இன்று அமேசான் பிரைமில் ஜெயிலர் படம் பார்த்தேன். முன்பெல்லாம் கதாநாயகர்கள் சொக்கத் தங்கமாக இருப்பார்கள். எதார்த்த சினிமா என்கின்ற பெயரில் அவர்களை துவைத்து கிழித்து காயப் போட்டுக் கொண்டிருந்தோம்.

எம் ஜி ஆர் டூயட், சிவாஜியின் அழுகை என்று விமர்சித்துத் தள்ளிக் கொண்டிருந்தோம். ஆனால் என்ன இது... ?கொள்ளைக்காரனும் கொலைகாரனும் கதாநாயகனாம். ஒரு சிறைத்துறை காவலர் மாபியா கூட்டத் தலைவர் போல...கதையில் எந்தக் காட்சிக்கும் தர்க்கப் பொருத்தம் கிடையவே கிடையாது.
இந்த லட்சணத்தில் தங்கப் பதக்கம் சிவாஜி ரேஞ்சுக்கு ரஜினி பெத்த பிள்ளையையே கொல்கிறாராம். தங்கப் பதக்கம் பக்கத்திலயாவது வரமுடியுமா இந்தப் படம்? ..

"நானாடவில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளமிது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா"
என்ற பாடல் வரிகளும் பிரமீளாவின் அழுகுரலும் சிவாஜியின் கலங்கிய குரலும் இன்றும் இதயத்திலிருந்து பிரிக்க முடியாதவை.
சரி. இந்தப் படத்தை விடுங்கள். இதைக் கொண்டாடும் ஒரு பெரிய கூட்டத்தை பார்த்து எனக்கு அச்சமாக இருக்கிறது. இப்படிப் பட்ட படங்களில் நடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேறு...மேலும் காத்திரமான விமர்சனம் எதிர்ப்பு வரவேயில்லை... இவையெல்லாம்தான் நினைக்க நினைக்க பாரமாக இருக்கின்றன.












Click it and Unblock the Notifications