‘துணிவு’ நடிகர் டான்சர் ரமேஷ் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பிறந்தநாளன்றே அதிர்ச்சி!
டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை
சென்னை : டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமான 'டான்சர்' ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் டான்சர் ரமேஷ். இவரது தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டான்சர் ரமேஷ், தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் டான்சர் ரமேஷ்.
டான்சர் ரமேஷ்
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தில், தனது பகுதியில் நடக்கும் விழா மேடைகளில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி வந்துள்ளார். படிப்படியாக நடனம் கற்றுக்கொண்டு நல்ல டான்சராக உருவெடுத்த ரமேஷ், சினிமா வாய்ப்புக் கேட்டு சில ஆண்டுகள் முயற்சி செய்துள்ளார்.
நடனக் கலைஞர்
ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மூர் மார்க்கெட் பகுதியில் சாலையோரத்தில் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் கடையை நடத்தி வந்தார். இதனிடையே, நண்பர்களின் உதவியுடன் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
பிரபலம்
இவரது நடன வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் ரமேஷூக்கு கிடைத்தது. சமூக வலைதளங்களில் பிரபலமானதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன.
சினிமா நடிப்பு
சமீபத்தில், எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் டான்சர் ரமேஷ். அதேபோல, நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர்' படத்திலும் டான்சர் ரமேஷ் நடித்துள்ளார்.
தற்கொலை
டான்சர் ரமேஷ், புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் வசித்து வந்த நிலையில், கேபி பார்க் அடுக்குமாடி குடிடிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதிவாசிகளையும், அவரது ரசிகர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிறந்தநாள் அன்றே
டான்சர் ரமேஷின் பிறந்தநாள் இன்றுதான் என்று கூறப்படுகிறது. பிறந்தநாளன்றே டான்சர் ரமேஷ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
முதல் மனைவி வீட்டில்
டான்சர் ரமேஷின் முதல் மனைவி கேபி பார்க் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். டான்சர் ரமேஷ் தனது இரண்டாவது மனைவியுடன் மூர் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்துள்ளார். இன்று தனக்கு பிறந்தநாள் என்பதால் தனது முதல் மனைவியை சந்திக்கச் சென்ற நிலையில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.