“வெளங்காத மொழியில் எனக்கு விருது குடுத்தாங்க.. வெளங்கவாய்யா..?” - சாலமன் பாப்பையா தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு பத்மஸ்ரீ விடுது கொடுத்தார்கள். அந்த விருதில் என்ன எழுதி இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது என பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

விளங்காத ஒரு மொழியில் ஒரு விருது கொடுத்திருக்கிறார்கள். யாருக்கு அது பயன்படும்? இது திணிப்புதான் என சாலமன் பாப்பையா விமர்சித்துள்ளார்.

ஒரு மொழிக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல. இது மாற்றாந்தாய் மனப்பான்மை என பேராசிரியர் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

சாலமன் பாப்பையா

சாலமன் பாப்பையா

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா, எனக்கு இந்தி மொழி மீது வெறுப்பு கிடையாது. நான் ஒரு மொழி ஆசிரியன். எல்லா மொழிகளையும் விரும்புகிறவன். எங்கு அறிவு இருக்கிறதோ அவற்றையெல்லாம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்டவன். ஆனால், எந்த மொழியாவது என் மீது திணிக்கப்பட்டால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது

பத்மஸ்ரீ விருது

மேலும் பேசியுள்ள அவர், எனக்கு பத்மஸ்ரீ விடுது கொடுத்தார்கள். நான் அதை வாங்கப் போயிருந்தேன். ஆனால், கொடுத்திருக்கக் கூடிய விருதில் என்ன இருக்கிறது என்று ஒரு எழுத்து கூட எனக்குத் தெரியாது. ஏனென்றால் அதில் எல்லாமே இந்தியில்தான் இருக்கிறது. யாருக்கு விளங்கும் அது?

அதைப் பார்க்கும்போது இப்படித்தான் நாங்கள் தருவோம். அதை நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தித் தருவது திணிப்பாகவே இருக்கிறது. இதை மொழி அறிஞர்கள் யாருமே விரும்பமாட்டார்கள்.

விளங்காத ஒரு மொழியில் விருது

விளங்காத ஒரு மொழியில் விருது

மேலும் பேசியுள்ள சாலமன் பாப்பையா, நான் பத்மஸ்ரீ விருதை வாங்கும்போதே ஏண்டா இப்படி ஆகிப்போச்சே நமக்கு எனத் தோன்றியது. ஏனென்றால் என்ன கொடுத்திருக்கிறார்கள் என்றே தெரியாமல் வாங்கி வந்திருக்கிறேன். இப்போது அது எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறது இருக்கிறது. விளங்காத ஒரு மொழியில் நமக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறார்கள். யாருக்கு அது பயன்படும்? இது திணிப்புதான் எனத் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் கற்கலாம்

தேவைப்பட்டால் கற்கலாம்

தொடர்ந்து பேசிய அவர், இங்கிருந்து வட மாநிலங்களுக்குச் சென்றுள்ள மக்கள் அங்கு சென்று, அந்த மொழிகளை கற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்காக வருபவர்களும் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தேவைப்பட்டால் கற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

உலகம் முழுவதும் செல்வதற்கு ஆங்கிலமும், உள்ளூரில் பேச தமிழ் மொழியும் கற்றுக்கொள்வது அவசியம். மூன்றாவது மொழியாக ஏன் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும்? ஏற்கனவே ஆங்கிலத்தால் எல்லா மொழிகளுமே சிரமப்படுகின்றன. அதில் இதுவும் வந்து சேர்ந்தால், எங்கள் தாய்மொழி நிச்சயம் அடிபட்டுப்போகும். உயிரைக் கொடுத்தாவது தாய்மொழியைக் காப்பாற்றுவோம்.

மாற்றாந்தாய் மனப்பான்மை

மாற்றாந்தாய் மனப்பான்மை

ஒரு மொழிக்கு அதிக நிதி ஒதுக்குவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல. இது மாற்றாந்தாய் மனப்பான்மை. மத்திய அரசு எல்லா மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் தர வேண்டும். தனக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும், தன் மொழி தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் சரி எல்லோருக்கும் ஒரேமாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். எல்லோரையும் தாயாகப் பார்க்க வேண்டும். சிலரை மட்டும் பேயாகப் பார்க்கக்கூடாது.

அச்சம்

அச்சம்

மத்திய அரசின் கவனம் மொழிகளை வளர்ப்பதில் இல்லை. அவர்களின் கவனம் எல்லாம் இந்தியும், சமஸ்கிருதமும் மட்டும்தான். இந்த இரண்டு மொழிகளை வைத்து நாடு முழுவதும் உள்ள மற்ற மொழிகளை அழித்துவிட நினைக்கிறார்களோ என்ற அச்சமும் வருகிறது. நாம் சென்ற நூற்றாண்டில் இருந்தே இதை எதிர்த்து வருகிறோம். பிற மாநிலங்களிலும் இப்போது விழிப்புணர்வு எழுந்து வருகிறது. அது நல்ல சகுனம் என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+