ஒருவரிடமே அதிகாரம் உள்ளது.. சில அரசுகள் அமெரிக்க அதிபர் முறையில் ஆட்சி நடத்துகின்றன- சென்னை ஹைகோர்ட்
சென்னை: இந்தியாவில் சில அரசுகள் அமெரிக்க அதிபர் முறையில் ஆட்சி நடத்துகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளது.
ஒரு நபர் அல்லது கொஞ்ச நபர்கள் சேர்ந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் போக்கு இது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முதலில் தங்களது உள்கட்சித் தேர்தலை முடித்துக்கொண்டு பிறகுதான் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி சூரியமூர்த்தி என்பவரால் தொடரப்பட்ட ஒரு மனுவை விசாரித்த போது நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் கூறுகையில் இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகள், வெஸ்ட்மினிஸ்டர் ஸ்டைல் அல்லது அமெரிக்காவில் இருப்பது போல ஒரு நபர் அல்லது சில நபர்கள் கூட்டாக சேர்ந்து அதிகாரத்தை செயல்படுத்துவது போன்று இருக்கக்கூடாது என்றுதான் நினைத்திருப்பார்கள்.
சில சந்தர்ப்பங்களில் கூட்டு அதிகாரம் மூலமாக அரசுகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு எதிர்பார்க்கிறது. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கின்றன. இந்தியாவில் சில அரசுகள் அமெரிக்க அதிபர் முறையில் ஆட்சி நடத்துகிறது. இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதேநேரம் இந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து விட்டதால் இப்போது இந்த மனு பொருந்தாதது என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
அதேநேரம் மனுதாரர் நோக்கம் மதிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம்.
தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி தனது உட்கட்சி தேர்தலை எதிர்கொள்ளாமல் தேர்தலை நடத்துவது ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications