தவெகவை கூட்டணிக்கு வருமாறு சிலர் கெஞ்சுகிறார்கள்! தமிழிசை, வானதியை சொல்கிறாரா செங்கோட்டையன்?
சென்னை: எங்களுடன் கூட்டணியில் இணையுங்கள் என சில கட்சிகள் கெஞ்சி வருகிறார்கள் என முன்னாள் அமைச்சரும் தவெக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு புறம் 10 கட்சி கூட்டணி, மறுபுறம் 8 கட்சி கூட்டணி, எங்களோடு கூட்டணி வையுங்கள் என சில கட்சிகள் கெஞ்சுகிறார்கள்.

அந்த இரு கட்சிகளையும் புறம் தள்ளிவிட்டு 234 தொகுதிகளிலும் தவெக வெல்லும். விஜய் முதல்வராவார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் பேசியதில் சில கட்சிகள் தங்களுடன் கூட்டணி வைக்க கெஞ்சுகின்றன என கூறியிருந்தார். திமுக ஆட்சியை அகற்ற தேசிய ஜனநாயக கூட்டணியுடன் வாருங்கள் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதியும் அழைத்திருந்த நிலையில் செங்கோட்டையன் இவ்வாறு கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் செங்கோட்டையன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக காங்கிரஸ் 2 பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதில் ஒரு பிரிவு தங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது.
சீனியர் உறுப்பினர்கள் கொண்ட மற்றொரு அணி திமுக கூட்டணிக்கு விரும்புவதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி நிலவுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரம், 100 நாள் வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவைகளுக்கு கருத்து கூறாததால் பாஜகவுடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக சொல்வது பொய்யானது. தவெகவின் கொள்கை எதிரி பாஜக என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு என்னை முதலமைச்சராகும்படி சசிகலா தனிப்பட்ட முறையில் என்னை அழைத்து தெரிவித்தார். ஆனால் அப்போது இருந்த பொருளாதார நெருக்கடியால் அந்த வாய்ப்பை வேண்டாம் என நான் கூறிவிட்டேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications