அரசுப் பள்ளிகளில் செப்.15 முதல் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்?
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை வரும் செப்.15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

அதில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச் சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனை செயல்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை முதற்கட்டமாக செயல்படுத்திட ஆணை வெளியிடப்பட்டது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர், க.இளம்பகவத், ஐ.ஏ.எஸ் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டடார். இந்த திட்டத்துக்கான பள்ளிகள், பயனாளிகள், ஒருங்கிணைப்பு மையங்கள், செயல்படுத்தும் அமைப்புகள் ஆகியவற்றை துரிதமாக கண்டறிதல், மூலப்பொருட்கள் கொள்முதல், உள்ளூர் காய்கறிகள் கொள்முதலை மேற்கொள்ளுதல் ஒட்டுமொத்த செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பு அலுவலர் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளிகளில் நாள்தோறும் காலை வழங்கப்படும் சிற்றுண்டிகள் குறித்து வெளியிடப்பட்டது. அதில் வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications