வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தாதீங்க.. இப்படித்தான் ஆகும்.. தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன காரணம்!
சென்னை: வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய கிழமைகளில் தேர்தல் நடத்தக் கூடாது என தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலுமே குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

தென் சென்னை தொகுதியில் இந்த முறை 54.27% வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்நிலையில், தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைவது என்பது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லை, அனைவருக்குமே கவலை அளிக்கக்கூடிய ஒன்றுதான். தேர்தலில் மக்களை வாக்களிக்க வைப்பதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தல் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் சரிபார்க்கவேண்டும். இல்லையென்றால் விளம்பரம் செய்தும் எந்த பயனும் இல்லை. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை களைந்தாலே 100 % வாக்குகளை பதிவு செய்யலாம்" என்றார்.
மேலும், சென்னையில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது பற்றி பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை என நினைத்து விட்டார்கள். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் வாக்குப்பதிவு நடத்தக்கூடாது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. புதன், வியாழன் கிழமைகளில் தேர்தல் நடத்தினால் வாக்கு சதவீதம் உயரலாம் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications