களத்தில் 500 ஊழியர்கள்.. ஒரு வழி பாதையான 4 வழி பாதை! ஆவடியில் தடம்புரண்ட ரயில் எப்போது மீட்கப்படும்?
சென்னை: ஆவடி அருகே அண்ணனூர் பணிமனையிலிருந்து, ஆவடி ரயில் நிலையத்திற்கு சென்ற புறநகர் மின்சார ரயில் ஒன்று இன்று அதிகாலை தடம்புரண்டு விபத்தில் சிக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. விபத்து காரணமாக சென்டரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. ரயிலை மீட்க 500க்கும் அதிகமான ஊழியர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு புறநகர் ரயில்களுக்கும் பங்கு இருக்கிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான வழித்தடம்தான் சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடம். இன்று காலை
இந்த மின்சார ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.
அதிகாலை 6 மணியளவில் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி செல்ல இருந்தது. இப்படி இருக்கையில் ரயில் விபத்தில் சிக்கியதால், அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்துக்கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் 4 வழிப்பாதையில் ஒரேயொரு தண்டவாளத்தில் மட்டுமே ரயில்கள் சென்ட்ரல் நோக்கி இயக்கப்பட்டன. தற்போது வரை இதே நிலைமைதான் நீடித்து வருகிறது.
இது குறித்து தென்னக ரயில்வே துணை மேலாளர் கூறுகையில், "விபத்தில் சிக்கிய மின்சார ரயிலின் பெட்டிகளை மீட்க சுமார் 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்குள் ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டு, இந்த பாதையில் ரயில் இயக்கம் சீர் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

அதேபோல இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்றுடன் பண்டிகைக்கால விடுமுறை முடிந்து மக்கள் சென்னை திரும்ப இருக்கின்றனர். எனவே நாளைக்குள் இந்த வழித்தடத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் ஊழியர்கள் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications